கொளுத்தும் வெயில் - நெல்லையில் மலைபோல் குவியும் தர்பூஸ் பழங்கள்
நெல்லை: நெல்லை மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் கடும் வெயில் அடித்து வருவதால் அங்கு தர்பூஸ் பழ விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
பருவ மழை பொய்த்ததால் கோடை வெயிலின் தாக்கம் கடந்த வருடங்களை விட தற்போது அதிகமாக உள்ளது. இதனால் ஹோட்டல், மற்றும் டீக்கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் குறைந்து காணப்படுவதுடன் குளிர்பானங்களான இளநீர், சர்பத் ஸ்டால், ஜூஸ் கடைகள் என மக்கள் கூட்டம் அலைமோதிகிறது.
கோடை வெயிலின் தாக்கத்தை போக்குகின்ற வகையிலும், ஏழைகளுக்கு குறைந்த விலையில் தாகத்தை தீர்க்கின்ற வகையிலும் தர்ப்பூசணி பழங்கள் வரபிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் நெல்லையில் தர்ப்பூசணி பழங்களின் வருகை அதிகரித்து ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திண்டிவனம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தர்பூசணி பழங்களை கிலோ ரூ.5.50க்கு கொள்முதல் செய்து லாரி வாடகை டன் ஓன்றுக்கு ரூ.1000 வீதம் சுமார் 10,000 வரை வாடகை கொடுத்து கொண்டு வருகின்றனர்.
இவை நெல்லை பகுதிகளில் கிலோ ரூ.10 வரை விற்பனையாகிறது.
மேலும் பல்வேறு பகுதிகளில் கூறு போடப்பட்டு சில்லரை விற்பனையாகவும் நடந்து வருகிறது. எவ்வித பின்விளைவுகளையும் ஏற்படுத்தாத தர்ப்பூசணி பழங்களை வாங்கிச் சாப்பிட்டு வெயில் கொடுமையிலிருந்து தப்ப முயலுகின்றனர் மக்கள்.