கல்வித் தரம் மேம்பட தாய் மொழியில் கற்பிக்கவேண்டும்-அமைச்சர் பொன்முடி
காரைக்குடி: தமிழகத்தில் கல்வியின் தரம் மேம்பட வேண்டும் என்றால் தாய் மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில் தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாடு காரைக்குடியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசுகையில்,
உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே அரசின் தற்போதைய குறிக்கோளாகும். இதற்கான தரத்தை உயர்த்த பல்கலைக்கழகங்கள் கருவியாக செயல்பட வேண்டும்.
தமிழகம் கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக திகழ்கிறது. அது மட்டும் போதாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பட்டதாரியாவது உருவாக வேண்டும். அதற்காக அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுகிறது.
வேலைவாய்ப்பு வழங்க தொழில் மயமாதல் அவசியம். தொழில் மயமாதலுக்கு விவசாய நிலங்களை பயன்படுத்தியே ஆகவேண்டும். இம் முரண்பாட்டை எவ்வாறு சமாளிப்பது என ஆராய்ச்சி செய்யவேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் தொழில்திறன்களை வளர்க்க நூறு சமுதாய கல்லூரிகள் செப்டம்பரில் துவக்கப்படும்.
கல்வி தரம் மேம்பட வேண்டும் என்றால் தாய் மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என்றார்.
இந்த மாநாட்டில் அமைச்சர் பெரியகருப்பன், கர்நாடகா பல்கலை துணைவேந்தர் சீனிவாஸ் கே.சைதாபூர், இந்திய பல்கலை கூட்டமைப்பு பொது செயலாளர் பீனாஷா, மாணிக்கவாசகம், குன்றக்குடி பொன்னம்பல அடிகள், முன்னாள் துணைவேந்தர்கள் முத்துக்குமரன், கன்னியப்பன், மருதமுத்து, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை துணைவேந்தர் அருணா ஆகியோர் பங்கேற்றனர்.