பின்லாந்து தமிழறிஞருக்கு கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது

இதுகுறித்து மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 30.6.2008 அன்று சென்னை மெரினா கடற்கரையில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை முதல்வர் கருணாநிதி திறந்துவைத்து பேசும்போது, தனது சொந்த பணத்தில் ரூ.1 கோடியை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை ஒன்றை நிறுவி அந்த தொகையில் இருந்து கிடைக்கும் வட்டித்தொகையில் ஆண்டுதோறும் தமிழக வரலாற்றுக்கு துணைபுரியும் பயன்மிக்க கல்வெட்டுக்களை ஆய்வோருக்கு விருது, பொற்கிழி வழங்கப்படும்' என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, முதல்வர் கருணாநிதி தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 கோடியை செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளைக்கு வழங்கினார். அந்த தொகை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை என்ற பெயரில் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 30.7.2009 அன்று செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் நடைபெற்ற ஐம்பெருங்குழு, எண்பேராயம் கூட்டத்தில், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி அறக்கட்டளையில் இருந்து பண்டை தமிழ்பண்பாடு, நாகரீகம் பற்றிய புதிய கருத்துக்களை ஆராய்ந்து அறிந்து, உலக அளவில் ஏற்கத்தக்க வகையில் வெளிப்படுத்தி, செம்மொழி தமிழாய்வுக்கு சீரிய முறையில் பங்காற்றியுள்ள அறிஞர் அல்லது நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் பொற்கிழியுடன் மதிப்புச்சான்றிதழ், நினைவுப்பரிசு கொண்ட கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்குவது' என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 2009-ம் ஆண்டுக்குரிய விருதுக்கான பரிந்துரைகளை வரவேற்று பத்திரிகைகள் வாயிலாகவும், இணையதளத்தின் மூலமாகவும் 5.1.2010 அன்று விரிவான விளம்பரம் செய்யப்பட்டு இறுதி நாளான 26.2.2010 வரை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, பின்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து 133 பரிந்துரைகள் வரப்பெற்றன.
விருது தேர்வுக்குழு உறுப்பினர்களான பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி, நீதிபதி எஸ்.மோகன், செக்கோஸ்லோவேக்கியா நாட்டு தமிழறிஞர் ஐரோஸ்லாவ் வாசெக், ஐராவதம் மகாதேவன், கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோர் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தலைவரான முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நேற்று கூடி ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, 2009-ம் ஆண்டுக்கான விருதுக்கு பின்லாந்து நாட்டைச்சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவை தேர்வு செய்தனர். அவருக்கு கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் விருது வழங்கப்படும்.
பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சிந்துசமவெளி நாகரீக எழுத்து சிக்கலை தீர்க்க அரும்பாடுபட்டவர்.
சிந்துவெளி பண்பாடும், அதன் எழுத்தும் திராவிட குடும்பத்தை சேர்ந்தவை என்று 1968 ஆண்டிலிருந்தே வலியுறுத்தி வருகிறார். திராவிட மொழியியலையும், பழந்தமிழையும் கற்றுத்தேர்ந்தவர். தனது நூலின் மூலம் சிந்துவெளி எழுத்தின் மொழி திராவிடமே என்ற கருத்தை நிலைநாட்டி வருபவர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications