ஆட்டிசம் ஆய்வு மையம் தொடங்கத் துடிக்கும் பார்வையற்ற மதுரை இளைஞர்
மதுரை: ஆட்டிசம் எனப்படும் வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்த ஆய்வு மையத்தைத் தொடங்க மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற இளைஞர் மிகவும் தீவிரமாக உள்ளார்.
மதுரை மஞ்சணக்காரத் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் சத்யபிரகாஷ் (29). இவர் பிறவியிலேயே பார்வையை இழந்தவர்.
மதுரை விஸ்வநாதபுரம் ரோட்டரி ஹெலன் கெல்லர் பேசும் புத்தக நிலையத்தில் பார்வையற்றோர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு சத்யபிரகாஷ் பேசுகையில்,
நான் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த போது ஆட்டிசம் பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தேன். ரோட்டரி ஹெலன்கெல்லர் பேசும் புத்தக நிலையம் மூலம் பயிற்சி பெற்று ஜி.ஆர்.இ. மற்றும் டோபல் தேர்வு எழுதினேன்.
இதன் மூலம் கலிபோர்னியா சாந்தா கிளாரா பல்கலையில் எம்.ஏ (கவுன்சிலிங் சைக்காலஜி) படித்தேன். அங்குள்ள பார்வை குறைபாடு உள்ளோர் படிக்கும், பேசும் நூலகத்தில் பயிற்சி பெற்றேன்.
தற்போது அமெரிக்க டெக்சாஸ் பல்கலையில் பி.எச்.டி ஆட்டிசம் படிக்கிறேன். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மொழித்திறன், மாறுபட்ட நடவடிக்கைள், பிற குழந்தைகளுடன் சேராமல் தனிமையில் இருத்தல் போன்ற குறைபாடுகளுடன் காணப்படுவர்.
ஆட்டிசம் ஏற்படுவதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆட்டிசத்திற்குக் காரணமாக கருதப்படும் ஜீன் குறித்த ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது.
அந்த வகையில், ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையம் மதுரையில் துவக்குவதே எனது லட்சியம் என்றார்.
சத்யபிரகாஷ், தியாகராஜர் மாடல் மேல்நிலை பள்ளியில் கடந்த 1999 ம் வருடம் பிளஸ் 2 தேர்வில் சைக்காலஜி - யில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர்.
தொடர்ந்து அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ., கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் எம்.ஏ., சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்.சி. (அலைடு சைக்காலஜி) படித்தவர்.
தற்போது அமெரிக்க டெக்சாஸ் பல்கலையில் பி.எச்.டி.(ஆட்டிசம்) ஆய்வுப் படிப்பை மேற்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications