திருவண்ணாமலை கோவில் யானை இறந்ததாக வதந்தி - விளக்கேற்றி பெண்கள் பரிகார பூஜை
திருவண்ணாமலை: திருவண்ணாலை அருணாச்சலேஸ்வரர் கோவில் யானை இறந்ததாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து பெண்கள் வீட்டின் முன்பு கோலம் போட்டு விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ருக்கு என்ற யானை உள்ளது. கோவில் திருவிழா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளின் போது நடைபெறும் சாமி ஊர்வலம், தேரோட்டம் ஆகியவற்றில் ருக்குதான் முன்னின்று நடத்தி செல்லும் பக்தர்கள் யானையை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் யானை இறந்து விட்டதாக வதந்தி பரவியது. திருவண்ணாமலை நகரம் மற்றும் புறகர்ப் பகுதிகளில் வதந்தி வேகமாக பரவியது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்த பீதி போவதற்குள் திருவண்ணாமலைப் பெண்களை இன்னொரு வதந்தி செய்தி வந்தடைந்தது. கோவில் யானை இறந்ததால் தீய விளைவுகள் ஏற்படும். அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்பதுதான் அது.
இதையடுத்து பெண்கள் தங்களது வீடுகள் முன்பு கோலம் போட்டு அதில் வாழை இலை வைத்து அகல் விளக்கேற்றி பூஜை செய்து சாமி கும்பிட்டனர்.
அதிகாலையில் கிட்டத்தட்ட அத்தனை வீடுகளிலும் பெண்கள் இந்த பரிகார பூஜையில் ஈடுபட்டதால் நகரமே அல்லோகல்லப்பட்டது.
ஆனால் யானை நலமாக இருப்பதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து நிர்வாகத் தரப்பில் கூறுகையில்,
ருக்கு நலமாக உள்ளது. யாரோ வீண் வதந்தி பரப்பி உள்ளனர். பொதுமக்கள், பக்தர்கள் யாரும் இதனை நம்பவேண்டாம்.
கடந்த வாரம் திருத்தணி கோவில் யானை இறந்தது. அதற்காக பொதுமக்கள் சிலர் பரிகார பூஜை செய்து வழிபட்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications