நவ. 25ல் ஷார்ஜாவில் இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தை திறக்கும் பிரதீபா பாட்டீல்
ஷார்ஜா: ஷார்ஜாவில் இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வரும் 25-ம் தேதி காலை 10.30 மணிக்கு திறந்து வைக்கிறார் என அதன் தலைவர் சுதீஷ் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.குடியரசுத் தலைவர் பிரதீபா அரபு நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மத் அல் காஸிமி அவர்களின் ஒத்துழைப்புடன் ஆறு காண்டு கால பெரும் முயற்சியில் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது இந்திய வர்த்தகர்கள் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வர்த்தக பரிவர்த்தனை செய்வதற்கு ஒரு பாலமாக செயல்படும்.
கடந்த 1970-ம் ஆண்டில் இந்திய வர்த்தகம் வருடத்திற்கு 180 மில்லியன் டாலராக இருந்தது. தற்பொழுது அது 45 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மையம் திறப்பு விழா காணவிருப்பதற்கு ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் டைரக்டர் ஜெனரல் ஹுசைன் அல் மஹ்மூதி பாராட்டு தெரிவித்தார். இம்மையத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் நல்கப்படும் என்றார்.
வர்த்தகர்கள் மத்தியில் இம்மையம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட ஊடகங்கள் முன்வர வேண்டும் என்று அதன் இயக்குநர் ஸ்ரீபிரியா தெரிவித்தார்.