சென்னை: தமிழில் அல்லாத பெயர் பலகைகள் விரைவில் அகற்றம்!
சென்னை: சென்னையில் தமிழில் அல்லாத பெயர் பலகைகள் அடுத்த சில நாட்களில் அகற்றப்படும் என்று தெரிகிறது.
சென்னையில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பெயர் பலகைகளில் முதலில் தமிழில் பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும், அதற்கு அடுத்ததாகவே மற்ற மொழிகளில் எழுதலாம் என்று மாநகராட்சி உத்தரவிட்டது.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி மே 31ம் தேதிக்குள் இதை அமலாக்க வேண்டும், எல்லா கடைகளிலும் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று மாநகராட்சி கெடு விதித்திருந்தது. இந்தக் கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து தமிழ் அல்லாத பெயர் பலகைகள் அகற்றப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இந் நிலையில் வணிக நிறுவனங்களுக்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரான சைதை ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது அறிக்கையில், சில வணிக நிறுவனங்கள் தமிழ் பெயர் பலகைகளை வைக்கவில்லை. அந்த நிறுவனங்களுக்கு மேலும் வாய்ப்பளிக்கும் வகையில் வரும் 20ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்ய வேண்டும், அதுவே இறுதி கால நீட்டிப்பு என்றும் அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஆனால், வெளிநாட்டில் உள்ள மேயர் மா.சுப்பிரமணியன், நாளை மறுதினம் சென்னை திரும்பியவுடன் அடுத்த 2 நாட்களில் தமிழ் பெயர் அல்லாத பலகைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications