ஆதி இசை.. தமிழிசையே!
சென்னை: உலகின் ஆதி இசை தமிழ் இசைதான் என்று திருப்பாம்புரம் சோ.சண்முகசுந்தரம் கூறினார்.
தமிழிசை கர்நாடக சங்கீதமான வரலாறு என்ற ஆய்வரங்கை சென்னை சங்கமம் அமைப்பு நடத்தியது.
இதில் பேசிய திருப்பாம்புரம் சோ.சண்முகசுந்தரம், யாழ் பாலையாகி, பாலை பண்ணாகியிருப்பதுதான் தொல்காப்பியம் காட்டும் வரலாறு. 103 பண்களிலிருந்துதான் வெவ்வேறு பெயர்களில் ராகங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
உதாரணமாக, வியாழக் குறிஞ்சியை செளராஷ்டிரம் என்று கூறுகின்றனர். உலகின் ஆதி இசை தமிழ் இசைதான். தமிழிசையை வளர்க்க இனி டிசம்பர் மாதத்தில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் சபாக்களில் நடக்காது, பூங்காக்களில்தான் நடக்கும் என்று அரசாங்கம் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.
எஸ்.ஏ.கே.துர்கா பேசுகையில், மக்கள் இசையான கிராமிய இசைதான் முதலில் தோன்றியது. அதற்குப் பிறகுதான் பண்கள். தெய்வ சன்னதிகளில், சடங்குகளில் பாடுவதற்கு ஒரு முறையும், லெளகீக விஷயங்களுக்குப் பாடுவதற்கு ஒரு முறையும் என பிரிந்தன. பண்தான் ராகமா? என்றால் இல்லை என்பதுதான் பதில். பண் வேறு, ராகம் வேறு. பண் என்பது வர்ண மெட்டு. சன்னதிகளில் பாடப்படுவது தேவாரப் பண்கள். சன்னதிகளில் பாடுபவர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வுதான் மேலோங்கியிருக்கும். இசை நிகழ்ச்சியை ஒருவர் நிகழ்த்தும்போது அதில் அவருடைய தனித் திறமையைக் கொண்டு வரவேண்டும் என்று நினைத்து பாடுவார்.
அந்தக்காலத்தில் கோயில்களில் ஓதுவார்களின் மூலம் காலங்காலமாக பாடப்பட்ட தேவாரத்தின் தொன்மையை நம்மால் இன்றைக்கும் உணர முடிகிறது. அதே நேரத்தில் அந்தக் காலத்தில் அரண்மனைகளில் எப்படி இசைக் கலை நிகழ்த்தப்பட்டது என்பதற்கு ஆதாரமில்லையே. எனவே தமிழிசைக்கும் கர்நாடக இசைக்கும் அதிக வித்தியாசமில்லை என்றோ, வித்தியாசமிருக்கிறது என்றோ உடனடியாக கூறிவிட முடியாது. இது ஆழமான ஆய்வுக்கு உட்பட்ட விஷயம் என்றார்.
சோ.முத்து கந்தசாமி தேசிகர் பேசுகையி்ல், ஞானசம்பந்தரின் பாடல்கள் அத்தனையும் இசைத் தமிழ். தமிழிசையில் பண் என்பதற்கு என்னால் பொருள் சொல்ல முடிகிறது. ஆனால் கர்நாடக இசையைக் கொண்டாடுபவர்களிடம் ராகம் என்பதற்கு என்ன பொருள்?. அது என்ன மொழி? என்று கேட்டால் அவர்களால் பதில் சொல்ல முடிவதில்லையே அது ஏன்? என்றார்.












Click it and Unblock the Notifications