சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்!

பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது தான் இப்படி 5 மொழிகள் ஒலித்தன.
விவாதத்தை துவக்கி வைத்துப் பேசிய திருவல்லிக்கேணி அதிமுக எம்எல்ஏ பதர் சயீத், தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் கலந்து பேசினார். தனது தொகுதி பிரச்னைகளை தமிழிலும் மற்றவைகளை ஆங்கிலத்திலும் அவர் பேசினார். அவர் பேசியதாவது:
வானுயர்ந்த, கலைநயமிக்க கட்டிடத்தை கட்டி இருக்கிறீர்கள். இது கண்டிப்பாக தேவைதான். ஆனால் இவையெல்லாம் நியாயத்தை எடுத்துரைக்குமா? இந்த அவையில் பேசுவதற்கு சரியாக நேரம் ஒதுக்கப்படுவதில்லை.
பிரச்சனைகளைப் பற்றி பேசினால், அம்மா அப்படி செய்தார், இப்படி செய்தார்' என்று பதிலளிக்கிறீர்கள். சரியாக பதிலளிக்க வேண்டும். விவாதத்துக்கு விவாதம் வைக்க வேண்டும். சண்டையிடக் கூடாது. இங்கு 22 பெண்கள் இருக்கிறோம். எங்களுக்கு நீங்கள் இரட்டிப்பு நேரம் தர வேண்டும்.
சபாநாயகர் ஆவுடையப்பன்: இப்போது நேரம் கொடுத்திருப்பதால்தான் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
பதர் சயீத்: இது எனக்குள்ள உரிமை. அதை நீங்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும். பெண்களிடம் ஓட்டு மட்டும் வாங்கப் போகிறீர்கள். பெண்களுக்கு இங்கு 5 நிமிடம் கூடுதல் நேரம் தரக் கூடாதா?.
பரீட்சைத் தாள்கள் இன்று பஸ்சிலும், ரயிலும் கிடக்கின்றன. ஓட்டுப் பெட்டிகளைப் போல் அவற்றை பாதுகாக்க வேண்டும். நீங்கள் (சபாநாயகர்) எங்களை அடிக்கடி வெளியேற்றுகிறீர்கள். ஆளும் கட்சியினர் மட்டுமல்ல எதிர்க்கட்சியினரும் மக்கள் பிரதிநிதிகள்தான். நீங்கள் அவையில் புன்னகை மன்னனாக இருக்க வேண்டும் என்றார்.
இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. பதர் சயீத், தமிழில் பேசும்போது மிகவும் தடுமாறினார்.
5 மொழிகளில் பேசிய எம்எல்ஏ:
இதையடுத்து ஓசூர் காங்கிரஸ் எம்எல்ஏ கோபிநாத் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என 5 மொழிகளில் பேசினார். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சபாநாயகர் ஆவுடையப்பன்: பேரவை விதி 56ன்படி தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளையெல்லாம் இங்கு பேசுவதற்கு அனுமதி அளிக்கலாம். கோபிநாத் என்ன பேசப் போகிறார் என்பதை ஆங்கிலத்தில் எழுதி என்னிடம் கொடுத்திருக்கிறார்.
கன்னடத்தில் பதிலளித்த ஜெ:
அமைச்சர் பரிதி இளம்வழுதி: கடந்த ஆட்சியில் கோபிநாத் தெலுங்கில் பேசும்போது, அப்போதைய முதல்வர் கன்னடத்தில் பதிலளித்தார். அப்போது அமைச்சராக இருந்த பொன்னையன், அம்மாவின் பேச்சு மிக அற்புதமாக இருந்தது. ஆனால், அவர் என்ன பேசினார் என்பதுதான் புரியவில்லை' என்று குறிப்பிட்டதை நினைவூட்ட விரும்புகிறேன்.
காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம்: முந்தைய முதல்வர் கூட இங்கு கன்னடத்தில் பேசியிருக்கிறார். எனவே கோபிநாத் தெலுங்கில் பேசியதில் தவறில்லை.
அமைச்சர் அன்பழகன்: கோபிநாத் பேச வேண்டியதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து சபாநாயகரிடம் கொடுத்துவிட்டுதான் பேசி இருக்கிறார். உங்கள் ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட அதே நடைமுறைதான் இப்போதும் பின்பற்றுகிறோம்.
அதிமுக எம்எல்ஏ சண்முகம்: அங்கீகரிக்கப்பட்ட மொழி எதையும் சட்டசபையில் பேசலாம் என்பது எங்களுக்குத் தெரியும். கோபிநாத் தனது பேச்சை மொழியாக்கம் செய்து உங்களிடம் கொடுத்து, தனது கடமையை நிறைவேற்றிவிட்டார். ஆனால் நீங்கள் அதன் நகலை எங்களுக்குத் தந்திருக்க வேண்டும். உங்கள் கடமையை நீங்கள் செய்யவில்லை. இப்போது அவர் என்ன பேசினார் என்பதே எங்களுக்குத் தெரியவில்லையே.
சபாநாயகர் ஆவுடையப்பன்: அப்படி தருவதற்கு விதியில்லை.
முதல்வர் கருணாநிதி: கோபிநாத் என்ன பேசுவார் என்று எதிர்பார்த்து, அதை மொழி பெயர்த்து தர முடியாது. பேசி முடித்த பிறகுதான், அவர் பேசியதை மொழி பெயர்த்துத் தரமுடியும். அது தரப்படும்.












Click it and Unblock the Notifications