திருப்பதி கோவிலுக்கு ஷார்ட்ஸ், பெர்முடாஸ் அணிந்து வர தடை வருகிறது
திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்குள் தொடை தெரியும் அளவுக்கு பெர்முடாஸ், ஷார்ட்ஸ் போன்றவற்றை அணிந்து வரத் தடை விதிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து திருப்பதி-திருமலை தேவஸ்தான செயல் அலுவலர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருமலை-திருப்பதி கோயிலுக்குள் நுழையும்போது சிலர் டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து வருவதாக புகார் வந்துள்ளது.
பெர்முடாஸ், டி-ஷர்ட்-ஷார்ட்ஸ் அணிந்து வருபவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கப் போவதில்லை. இதுதொடர்பாக கோயில் ஊழியர்களுக்கு விரைவில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளோம்.
அநாகரிகமான ஆடைகளை அணிந்து கோயிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்கவேண்டும். விரைவில் இதை அமலுக்கு கொண்டு வருவோம். அதே நேரத்தில் முழுக்கால் சட்டை (பேன்ட்), டி-ஷர்ட் அணிந்து கோயிலுக்குள் வருபவர்கள் தடை செய்யப்பட மாட்டார்கள் என்றார்.
முன்பெல்லாம் ஷார்ட்ஸ், பெர்முடாஸ், நைட்டி போன்றவற்றை ஆண்களும், பெண்களும் வீட்டுக்குள் ரிலாக்ஸ்டாக இருக்க அணிந்தார்கள். ஆனால் இப்போது வெளியிலும் அதை போட்டுக் கொண்டு படு கேஷுவலாக உலா வருவதால் பலருக்கும் தர்மசங்கடம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் இதுபோன்ற ஆடைகளுக்கு திருப்பதி கோவிலில் தடை விதிக்கப்படுவதை பல்வேறு இந்து, ஆன்மீக அமைப்புகள் வரவேற்றுள்ளன.












Click it and Unblock the Notifications