உத்தரகாண்ட் கோவிலில் 31 எருமை, 135 ஆடுகளை பலி கொடுத்த பக்தர்கள்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே ஒரு கோவிலில் 31 எருமை மாடுகள், 135 ஆடுகளை வெட்டிப் பலி கொடுத்தனர் பக்தர்கள்.
பாரி மாவட்டம், புங்கால் என்ற கிராமத்தில் உள்ள ஆராத்யா தேவி கோவிலில்தான் இந்த விலங்குகள் பலியிடப்பட்டன. அதிகாரிகள் இதைத் தடுக்க வருவற்குள் பலி கொடுக்கும் சடங்குகளை பக்தர்கள் நிறைவேற்றி விட்டனர்.
இந்த விலங்குகள் பலி கொடுக்கும் நிகழ்ச்சி பல வருடங்களாக இங்கு நடந்து வருகிறதாம். ஆனால் இது சட்டப்படி குற்றமாகும் என்று போலீஸ் தரப்பிலும், மாவட்ட நிர்வாக தரப்பிலும் கூறியிருந்தபோதிலும் அதையும் தாண்டி இந்த விலங்குகள் பலி கொடுக்கும் நிகழ்ச்சி தவறாமல் நடந்து வருகிறதாம்.
இந்த ஆண்டு இதைத் தடுத்து நிறுத்த தீவிரக் கண்காணிப்புக்குக் குழு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களை ஏமாற்றி விலங்குகளை பலி கொடுத்துள்ளனர் பக்தர்கள்.
கூரிய கத்திகளாலும், அரிவாள் போன்றவற்றைப் பயன்படுத்தியும், ஒவ்வொரு விலங்காக பலியிட்டுள்ளனர் பக்தர்கள். இதனால் அந்த இடமே ரத்தக் காடாக காணப்பட்டது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.