கட்டுகடங்காத கூட்டத்தால் திணறும் சபரிமலை : நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
தென்காசி: சபரிமலையில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் கூடுகிறது. இதனால் சபரிமலையில் எந்தப் பக்கம் திரும்பினாலும், ஒரே கூட்டமாக உள்ளது.
சபரிமலையில் ஐயப்ப தரிசனத்திற்காக பல மணி நேரம் நீண்ட வரிசையில் உணவின்றி தவிக்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர், பிஸ்கட், இனிப்பு, பலகாரங்கள் வழங்கும் பணி துவங்கியது. சபரிமலையில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் காரணமாக சன்னிதானம் அருகே பெரிய நடை பந்தல் முதல் மரக்கூட்டம் கடந்தும் நீண்ட வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பம்பை வந்து சேரும் பக்தர்கள் அங்கேயே தடுக்கப்பட்டு நீலி்மலை, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம், சரங்குத்தி மற்றும் சன்னிதானம் பகுதிகளில் நெரிசல் குறைந்த பிறகே தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பதினெட்டாம்படி ஏற விரும்பும் பக்தர்களில் ஒரு நிமிடத்திற்கு 70 பேர் மட்டுமே ஏற முடிகிறது. இதுவே கடந்த ஆண்டு 100 பேர் படியேறிச் சென்றுள்ளனர். இவ்வாறு பக்தர்கள் குறைவாக படியேற அனுமதிப்பதன் மூலம் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரி்ப்பதோடு, காத்திருக்கும் நேரமும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது 24 மணி நேரமும் பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பல மணி நேரம் நிற்கும் இடத்தை விட்டு நகரக் கூட முடியாத நிலையில் உணவின்றி, உறக்கமின்றி பக்தர்கள் தவித்து வருகின்றனர். இதனால் சில பக்தர்கள் மயக்கமடையும் நிலையும் ஏற்படுகிறது. மகர விளக்கு திருவிழா சாமி தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் இப்போதே சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளதால் தரிசனம் செய்ய 20 முதல் 22 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 தினங்களாகவே தமிழக-கேரள எல்லை புளியரையில் இருந்தே பம்பை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் சபரிமலை திணறி வருகிறது.












Click it and Unblock the Notifications