எங்கே போயின தீபாவளி வாழ்த்துகள்?

இன்டர்நெட், இமெயில், எஸ்எம்எஸ் இதெல்லாம் வருவதற்கு முன்பு தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்டவற்றுக்கு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ள இருந்த ஒரே சாதனம் கிரீட்டிங் கார்டு எனப்படும் வாழ்த்து அட்டைகள்தான். விதம் விதமான, வித்தியாசமான, அழகான வாழ்த்து அட்டைகளைத் தேடி அலைவார்கள் நம் மக்கள். குறிப்பாக இளைஞர் பட்டாளம்தான் இந்த கார்டு அனுப்பும் வேலையில் படு சிரத்தையாக திரிவார்கள்.
கடை கடையாக ஏறி இறங்கி அலசிப் பார்த்து அழகான, பிடித்தமான அட்டையைத் தேடிப் பிடித்து வாங்கி வந்து அதில் மேலும் சில வார்த்தைகள், வாசகங்களை சேர்த்து கவரில் வைத்து ஸ்டாம்பு ஒட்டி போஸ்ட் செய்து விட்டு நிம்மதி மற்றும் பெருமிதப் பெருமூச்சுடன் வீடு திரும்புவதை ஒரு கடமையாகவே வைத்திருந்தனர்.
தபால் துறையின் தாமதம் உலகப் புகழ் பெற்றது என்பதால் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வாங்கி அனுப்புவதும் உண்டு. இல்லாவிட்டால் இந்த தீபாவளிக்கு அனுப்பும் அட்டை அடுத்த தீபாவளிக்குத்தான் போகும் என்ற பயமும் இதற்குக் காரணம். இப்படியெல்லாம் மெனக்கெட்டு கார்டு அனுப்பிய காலம் போய் விட்டது. இப்போது விரல் நுனியில் விதம் விதமான வாழ்த்து செய்திகளை இன்டர்நெட்டில் சர்ச் செய்து, இமெயில் முகவரியை மட்டும் கொடுத்தால் சட்டென்று போய் விடுகிறது. அதேபோல தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளியன்றும் எஸ்எம்எஸ் அனுப்பும் கலாச்சாரம் பரவி விட்டது.
இப்படி இன்டர்நெட்டும், எஸ்எம்எஸ்ஸும், இமெயிலும் ஆக்கிரமித்துக் கொண்டதால் வாழ்த்து அட்டைகளைத் தேடிப் போவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போய் விட்டது. இருந்தாலும் இந்த அட்டைகள் இன்னும் விற்றபடிதான் உள்ளன. வாழ்த்து அட்டைகளை அனுப்புவதை தொடருவோர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.
என்னதான் எஸ்எம்எஸ், இமெயிலில் வாழ்த்து சொன்னாலும், வாழ்த்து அட்டைகளை வாங்கி உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்புவதில் உள்ள சுகமே அலாதிதான்.












Click it and Unblock the Notifications