24ல் கோவையில் ஜோதிடர்கள் ஆன்மிக மாநாடு : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
கோவை : வரும் 24-ம் தேதி கோவையில் ஜோதிடர்கள் ஆன்மிக மாநாடு நடத்த இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
கோவையை அடுத்த பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் திருமடத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோதிடர்கள், ஆன்மிகவாதிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் வரும் 24-ம் தேதி கோவையில் ஜோதிடர்கள் ஆன்மிக மாநாடு நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடந்த கூட்டத்தில் பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகளார், காமாட்சிபுரம் ஆதீனம் அனந்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள், மலுமிச்சம்பட்டி பாபுஜீ சுவாமிகள், நகர்பீடம் சிவதன செல்வன் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
ஜோதிடக் கலையை தொழிலாக கொண்டுள்ள ஜோதிடர்களுக்கு காவல் துறை தொந்தரவு அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 21-ம் தேதி மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை மனு அனுப்புவது என்று முடிவானது.
ஜோதிடக்கலையின் மகத்துவத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய வைத்தியர் சங்கங்கள், ஆன்மிக அமைப்புகளை ஒருங்கிணைத்து இந்து மக்கள் கட்சி சார்பில் வரும் 24-ம்தேதி கோவையில் ஜோதிடர்கள் ஆன்மிகப் பேரணி மற்றும் மாநாடு நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.