விடிய, விடிய நடந்த கள்ளழகரின் தசாவதாரம்: நாளை மலைக்கு புறப்பாடு
மதுரை: நேற்று மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவார நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2 வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 18-ம் தேதி அழகர் பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்.
இதையடுத்து ஆற்றோரத்தில் உள்ள ராமராயர் மண்டகப்படி வழியாக ஒவ்வொரு திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று வண்டியூர் வீரராக பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு வைகையாற்றில் உள்ள தேனூர் மண்டபத்திற்கு கள்ளழகர் புறப்பட்டார். அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனூர் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்றபின் அங்கிருந்து கள்ளழகர் புறப்பட தயாரானார். அப்போது பல்லக்கை தூக்கும் சேவந்தாங்கிகளில் ஒரு பக்கம் உள்ளவர்கள் தூக்காததனால் பல்லக்கு ஒரு புறமாக சாய்ந்தது. அதில் இருந்த பட்டரும், சாமிக்கு சாற்றப்பட்ட மாலைகளும் தரையில் விழுந்தன. இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் கள்ளழகர் ராமராயர் மண்டகப்படிக்கு சென்றார். இரவு அங்கு தங்கிய அவர் நள்ளிரவு முதல் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகன அவதாரம் ஆகிய அவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விடிய, விடிய நடந்த இந்த தசாவதார நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர். இதற்காக இரவு நேரத்தில் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டன.
ராமராயர் மண்டகப்படியிலிருந்து இன்று காலை 5 மணிக்கு மோகன அவதாரத்தில் புறப்பட்டு தல்லாகுளம் பகுதியில் உள்ள சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனமாகி நாளை (வியாழக்கிழமை) அதிகாலையில் பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்படுகிறார்.












Click it and Unblock the Notifications