குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் பெருந்திருவிழா துவங்கியது: ஆகஸ்ட் 17ல் முடியும்
தேனி: அருள்மிகு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா நேற்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் துவங்கியது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது குச்சனூர். இங்கு புகழ் பெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது.
இந்த கோயிவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் வரும் சனிக்கிழமை அன்று ஆடிப் பெருந்திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு முதல் அரசு சார்பில் ஆடிப் பெருந்திருவிழா நடைபெறுகிறது.
இந்த விழா நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இது வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி வரை 5 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும்.
இந்த திருவிழாவின் போது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் சுரபி நதிக்கரையில் குளித்து, தங்களது ஆடைகளை அந்த நதியிலேயே விட்டு விட்டு புத்தாடை அணியும் பழக்கம் உள்ளது.
மேலும் எள், உப்பு, பொரி வாங்கி கொடி மரத்தில் தூவி, பின்பு காக்கை வாகனத்தின் தலையில் சுற்றி வைத்து விட்டு அங்கு நெய் தீபம் ஏற்றி வைத்து, கோயிலில் உள்ள சனீஸ்வர பகவானை வழிபாடு நடத்தினால் தோஷம் கழிவதாக ஐதீகம்.
திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, தொழில் விருத்தியடையாமை உள்ளிட்ட பல காரணங்களுக்கு இங்கு வந்து பக்தர்கள் தோஷம் கழித்துச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications