குற்றால சாரல் திருவிழா: உச்சக்கட்ட வசூல் வேட்டையில் அதிகாரிகள்
கடையநல்லூர்: கடையநல்லூர் பகுதியில் குற்றால சாரல் திருவிழாவை காரணம் காட்டி அரசு அதிகாரிகள் உச்சக்கட்ட வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் சாரல் திருவிழா நடைபெறும். ஜூலை மாதத்தில் தென்மேற்கு பருவமழை முழுமையடைந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும் என்பதால் சாரல் திருவிழாவின்போது தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் வருவர்.
சாரல் திருவிழாவின்போது சுற்றுலா பயணிகள் மனம் கவரும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு, அவர்களுக்காக பல்வேறு போட்டிகளும் நடத்தப்படும். இதனால் சாரல் திருவிழா சுற்றுலா பயணிகளை மட்டுமின்றி உள்ளூர்வாசிகளையும் கவர்ந்து வருகிறது.
ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் சாரல் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் முக்கிய அரசு துறைகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு அத்துறை மூலம் நடைபெறும் பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைப்பர்.
இந்நிலையில் இந்தாண்டு சாரல் திருவிழா வரும் 23-ம் தேதி துவங்கும் எனத் தெரிகிறது. இதில் பல துறைகள் கலந்து கொள்கின்றன. சாரல் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதால் இதையே காரணம் காட்டி வருவாய் துறை உள்பட பல்வேறு துறையினர் தீவிர வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக வருவாய் துறையினர் அனுமதியின்றி மணல், கல் போன்ற கனிம பொருட்களை அதிக அளவு கடத்துபவர்களிடம் வசூல் செய்கின்றனர். கடையநல்லூர் பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் இயங்கி வரும் நிலையில் செங்கல் சூளைக்கு தேவையான வண்டல் மண் ஏராளமான அளவு அனுமதியின்றி கடத்தப்படுகிறது. அவ்வாறு கடத்துபவர்களிடம் வருவாய் துறையினர் சாரல் திருவிழாவை காரணம் காட்டி பல லட்சம் வசூல் செய்கின்றனர்.
வருவாய் துறையினருக்கு வழக்கமான மாமூலை விட சாரல் விழாவுக்கு கூடுதல் மாமூல் கொடுத்ததால் மணல் உள்பட கனிம பொருட்கள் கடத்துபவர்கள் கேள்வி கேட்பாரின்றி இரவும், பகலும் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இதனால் நீர் நிலைகள் பாதிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மணல், கல் உள்பட கனிம் பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் அரிசி, மண்ணெண்ணெய், ரேஷன் அரிசி கடத்துபவர்களிடம் சாரல் விழாவுக்காக வருவாய் துறையினர் கட்டாய வசூலில் ஈடுபடுவதோடு, சான்றிதழ் வாங்க வரும் பாமர மக்களிடமும் தங்கள் கைவரிசையை காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாரல் திருவிழாவுக்காக செலவு செய்ய வேண்டும் என்கிற சாக்கில் தங்கள் கஜானாவை நிரப்பி வரும் வருவாய் துறையினரின் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கட்டுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். குற்றாலத்தில் சாரல் மழை பெய்கிறதோ, இல்லையோ வருவாய் துறையினர் காட்டில் அடைமழை பெய்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.












Click it and Unblock the Notifications