துபாய் தமிழ்ச் சங்க 10ம் ஆண்டு விழா-கலகலப்பூட்டிய லியோனி பட்டிமன்றம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். துவக்கமாக அமீரக தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருக்குறள் மற்றும் இன்று ஒரு தகவல் ஆகியவற்றை மாணவ, மாணவியர் வழங்கினர்.
பொதுச் செயலாளர் சி. ஜெகந்நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
துபாய் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு சிறப்பு மலரை மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் வெளியிட முதல் பிரதியினை இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மாவும், அதனைத் தொடர்ந்து ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் சையத் எம் ஸலாஹுத்தீன், மதுரை மருத்துவர் தன்வந்திரி கார்த்திக்வேல், கன்சல் அசோக்பாபு, இந்திய சமூகநல மைய கன்வீனர் கே. குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மொரிஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் அமீரகத்தில் தமிழ் கலை, கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் செயல்பட்டுவரும் துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகளைப் பாராட்டினார். மேலும் மொரிஷியஸ் தமிழ் அமைப்பினருக்கும், துபாய் தமிழ்ச் சங்கத்திற்கும் இடையே இணைப்புப் பாலமாக இருப்பேன் என்றார்.
இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா இந்தியாவின் தொன்மைக் கலாசாரமான தமிழ்க் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதத்தில் துபாய் தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் சையத் எம் ஸலாஹுத்தீன் மனம் ஒரு குரங்கு என்பதனை குட்டிக்கதையின் மூலம் விவரித்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
மதுரை மருத்துவர் தன்வந்திரி கார்த்திக்வேல் தமிழ் வளர்த்த பெருமைக்குரிய மதுரையிலிருந்து தன்னை அழைத்து கௌரவித்த தமிழ்ச் சங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்திய சமூகநல மைய கன்வீனர் கே. குமார் அமீரகச் சிறைகளில் வாடிவரும் 18 இந்தியர்களை வெளிக்கொணர வந்த்துள்ளதை தெரிவித்தார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் துயர்களை போக்கிட நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளதை விவரித்தார்.
அதனைத் தொடர்ந்து மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா / பின்பா எனும் தலைப்பில் திண்டுக்கல் லியோனியின் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் கோவை தன்பால், முத்துநிலவன், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விஜய் டிவி சேதுவின் தொகுப்பில் பிரகாஷின் இசையமைப்பில் பிரியங்கா, சரண், நித்யஸ்ரீ, கிருஷ்ணமூர்த்தி, கோகுல் ஆகியோரின் பாடல் இடம்பெற்றது. கவிதா பிரசன்னா குழுவினரின் நடன நிகழ்ச்சியும், சந்திரா கீதாகிருஷ்ணனின் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவினை மீரா கிரிவாசன் தொகுத்து வழங்கினார். பொழுதுபோக்குத்துறை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு அமெரிக்கன் கார்டன், ஈடிஏ அஸ்கான் குழுமம், வேல்ஸ் பல்கலைக்கழகம், எக்கோஃபார்ம்ஸ், தானிஷ் அஹமது பொறியியல் கல்லூரி, பிளாக் துலிப் பிளவர்ஸ், அரப் லைட், சென்னை ஜுவல்லர்ஸ், பேங்க் ஆஃப் பரோடா, சிவ் ஸ்டார் பவன், யுஏஇ எக்ஸ்சேஞ்ச், மூன் டிவி, ஹலோ 89.5 எஃப்.எம், தினமலர், தட்ஸ் தமிழ்.காம், முதுகுளத்தூர்.காம், சத்யம் டிவி உள்ளிட்டவை அனுசரனை வழங்கியிருந்தன.
விழா சிறப்புற நடைபெற துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். விழாவில் ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவு வரையும் இருந்து சிறப்பித்தது லியோனியை அசரவைத்தது.












Click it and Unblock the Notifications