ரியாத்தில் தவ்ஹீத் ஜமாத் நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்
ரியாத் மாநகரிலுள்ள மிகப்பெரும் மருத்துவமனைகளில் ஒன்றான கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை இரத்த வங்கியில் கடந்த 27-ம் தேதி மாபெரும் ரத்ததான முகாம் நடந்தது. இது காலை 9.30 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இம்முகாமை தமிழ் முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலத்தவர்களுடன் சேர்த்து, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், எகிப்து, சிரியா மற்றும் ஏமன் நாட்டை சேர்ந்தவர்களும் ரத்ததானம் செய்தனர்.
தனது உடன்பிறந்த சகோதரனுக்குக்கூட இரத்த தானம் செய்ய பலர் தயங்கி வரும் இக்கால கட்டத்தில் கண்ணுக்கு தெரியாத நோயாளிகளுக்காக இரத்த தானம் செய்ய இங்கு போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். அதில் ஒருவர், தான் 23வது முறையாக இரத்ததானம் செய்கிறேன் என்று கூறி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்தார் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தின் இரத்த தான பொறுப்பாளர் ஃபெய்ஸல் முஹம்மது குறிப்பிட்டார்.
இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மாநகரில் நடத்தும் 11-வது இரத்த தான முகாமாகும். முகாம்கள் மட்டுமின்றி அவசர தேவைகளுக்காகவும் அடிக்கடி இரத்ததானம் வழங்கப்பட்டு வருகின்றது.
அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து விருதுகளை பெற்று வருவது போல, சவுதி அரேபியாவிலும் தமிழ் அமைப்பான ரியாத் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது.
மேலும், இதே நாளில் சவூதி அரேபியாவின் மற்றோரு பகுதியான தமாம் நகரத்திலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்த தான முகாம் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications