பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றக் கோரி தொடர் பொதுக் கூட்டங்கள்-சீமான்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதால் அவர்கள் தூக்கு கொட்டடி முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
உலகம் நாகரீகமான முறையில் எவ்வளவோ வளர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தண்டனை முறைகள் தவறு செய்த மனிதனைத் திருத்துமாறு இருக்க வேண்டும். தவிர அவனைச் சட்டத்தின் பெயரால் கொலை செய்வதாக இருக்கக்கூடாது.
கல்வியிலும் மனித உரிமை பற்றிய விழிப்புணர்விலும் மிகவும் மேம்பட்ட இன்றயை நாகரீக உலகம் மரண தண்டனையை, ஒரு கொடுங்குற்றமாகக் கருதுகிறது. அதனால் தான் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது.
உலகத்துக்கே அகிம்சை போதித்ததாகக் கூறும் இந்தியாவில்தான் மரண தண்டனை இருக்கிறது. அரசியல் குறுக்கீடற்ற நேர்மையான, சுதந்திரமான, விசாரணை முறைகள் நமது காவல் துறை அமைப்பில் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் முழுமையான வாய்ப்பு இந்தியாவில் அளிக்கப்படுவது இல்லை.
3 தமிழர்கள் இன்று தூக்கு கயிற்றின் முன் நிறுத்தப்பட்டிருப்பதும் அவ்வாறே இதனை மாற்றி அமைக்கும் சமூகக் கடமை நம் அனைவரின் முன்பும் இருக்கிறது. தவறிழைக்காத 3 தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரியும் இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.
வருகிற 26 ந்தேதி பல்லடத்திலும், 27 ந்தேதி திருச்சியிலும், 28 ந்தேதி நெல்லையிலும், 29 ந்தேதி கடலூரிலும், 31 ந்தேதி கோவையிலும், செப்டம்பர் 2 ந்தேதி மன்னார்குடியிலும் கூட்டங்கள் நடைபெறுகிறது. அனைத்துக் கூட்டங்களிலும் நான் கலந்து கொண்டு பேசுகிறேன் என்று அதில் கூறியுள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications