ஊட்டி மலை ரயிலுக்கு புதிய என்ஜின்-சோதனை ஓட்டம் வெற்றி
ஊட்டி: ஊட்டி மலை ரயிலுக்கு வாங்கப்பட்டுள்ள புதிய என்ஜினின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று ஊட்டி மலை ரயிலாகும். மேட்டுப்பாளையத்திலிருந்து இது இயக்கப்படுகிறது. மலைப் பாதையில் வளைந்து நெளிந்து ஓடும் இந்த ரயிலில் பயணம் செய்தபடி ஊட்டி மலை அழகை ரசிப்பது தனி சுகமாகும்.
சுற்றுலாப் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த ரயிலுக்கு பழைய அறுதப் பழசான என்ஜின்களை வைத்து ஓட்டி வந்தனர். இதனால் மலை ரயில் பல முறை என்ஜின் பழுது காரணமாக வழியில் நிற்கும் அவலம் நீடித்து வந்தது.
இதையடுத்து நிரந்தரத் தீர்வாக, புதிய என்ஜின்களைப் பொறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து திருச்சி பொன்மலை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் புதிய என்ஜின்கள் தயாரிக்க ஆர்டர் தரப்பட்டது.
நான்கு என்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் முதல் என்ஜின் தற்போது வந்துள்ளது. அதன் சோதனை ஓட்டம் மேட்டுப்பாளையம் முதல் கல்லார் வரை நடத்தப்பட்டது. அது வெற்றி பெற்றதாக இன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இனி புதிய என்ஜினைக் கொண்டு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் தடங்கலின்றி பயணம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications