கோடை விடுமுறை: குமரி, ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி: கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி, ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கடந்த 1975-ம் ஆண்டிற்கு முன் வரை சிறிய பேருந்து நிலையம், ஓரிரு தங்கும் விடுதிகள், சிறு கடைகள் என்று சாதாரணமான சுற்றுலாத் தலமாக இருந்தது கன்னியாகுமரி. சுவாமி விவேகனாந்தருக்கு நினைவு மணடபம் திறக்கப்பட்ட பின் குமரியின் புகழ் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியது. 2000-ம் ஆண்டில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை திறக்கப்பட்ட பின்னர் கன்னியாகுமரி சர்வதேச அளவில் புகழ் பெறத் தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளில் தான் கன்னியாகுமரி பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆண்டு ஒன்றிற்கு குறைந்தபட்சம் 25 லட்சமும் அதிகபட்சமாக 30 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப இன்று நட்சத்திர ஓட்டல் முதல் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல் என 100-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், உணவகங்கள், 500-க்கும் மேற்பட்ட கடைகள் என கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக திகழந்து வருகிறது. முன்பெல்லாம் கன்னயாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம், பகவதி அம்மன் கோவில், புனித அலங்கார உபகார அன்னை ஆலயம், காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம், முக்கடல் சங்கமம் போன்ற சுற்றுலா அம்சங்களை பார்வையிட்டு உடனடியாக திரும்பும் நிலையே இருந்தது.
மத்திய, மாநில சுற்றுலாத் துறையின் சார்பில் ஆண்டிற்கு பல கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு தங்கிவிட்டு மறுநாள் வட்டகோட்டை, சுசீந்திரம், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிபாலம், பத்மநாபபுரம் அரண்மனை, சொத்தவிளை கடற்கரை போன்ற பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.
கடந்த வாரம் வரை தேர்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்ட கன்னியாகுமரியில் கடந்த இரு தினங்களாக கூட்டம் அலைமோதுகிறது. காலையில் இருந்து இரவு வரை கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் தான். முக்கடல் சாலை, சன்னதி தெரு போன்ற இடங்கள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.
ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்
தகிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் ஊட்டியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெயில் கொளுத்துகின்றது. மேலும் கடும் மின்வெட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த நிலையில் கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் பலர் ஆர்வமாக ஊட்டியை நோக்கி படை எடுத்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக ஊட்டி சாலைகள் அனைத்தும் மக்கள் வெள்ளமாக காட்சி அளிக்கின்றன.
மேலும், பலர் கார்கள் மூலம் ஊட்டியில் முகாமிட்டுள்ளதால் சாலைகள் எங்கும் வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
ரோஜா பூங்காவில் மலர்ந்துள்ள அழகிய ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் பேரார்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.
இது குறித்து ரோஜா பூங்கா நிர்வாகி ஒருவர் கூறியதாவது,
ஊட்டி விஜயநகரம் பகுதியில் 1996-ம் ஆண்டு தோட்டக் கலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆறு தளங்களில் ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டது. இன பூங்காவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜாக்கள் மலர்ந்து கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றன.
சில தினங்களுக்கு முன் ஊட்டியில் கோடை மழை பெய்ததால் பூங்காவில் உள்ள ரோஜா மலர்கள் மலரத் துவங்கியுள்ளன. இதனைக் கண்டு களிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications