துபாயில் சிரிப்பலை கிளப்பிய 'நகைச்சுவையாளர்கள் சங்கமம்'
துபாய்: உலக நகைச்சுவையாளர் சங்க துபாய் கிளையின் மார்ச் மாத கூட்டம் அல் கிசைஸ் ஆப்பிள் சர்வதேட பள்ளியில் 16.03.2012 அன்று மாலை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சங்கத்தின் தலைவர் எம். முகைதீன் பிச்சை வரவேற்று பேசினார். விருதை கவிஞர். செய்யது ஹுசைன் நகைச்சுவையின் சிறப்பையும், உலக நகைச்சுவையாளர் சங்கத்தை வாழ்த்தியும் தான் எழுதிய கவிதையைப் பாடலாக பாடினார்.
பேராசிரியர் இளங்கோ, கிரஸென்ட் ஆங்கிலப் பள்ளி முதல்வர் கலிஃபுல்லா, கே.என். சிவகுமார், சேஷாத்திரி, கபீர், நியாஸ் மற்றும் அஹமது ஆகியோர் தங்களின் நகைச்சுவை பேச்சால் அரங்கினை அதிர வைத்தார்கள்.
சிறுவர், சிறுமிகளும் ஜோக்குகள் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்து பெரியவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபித்தனர். சௌம்யா மற்றும் காதர் ஆகியோர் பாடல்கள் பாடி வந்தவர்களை மகிழ்வித்தார்கள்.
நிகழ்ச்சியை குணா தொகுத்து வழங்கினார். இறுதியாக சங்க செயலாளர் கமலக்கண்ணன் நன்றி கூறினார். இத்ரீஸ் மற்றும் சுல்தான் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.