துபாயில் வானலை வளர்தமிழ் சார்பில் சிறப்பிதழ்கள் வெளியீடு
துபாய்: வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ்த்தேரில் ‘தனிமை' மற்றும் ‘ஆசை' ஆகிய சிறப்பிதழ்கள் வெளியீடு மற்றும் சிறப்புக் கவியரங்கம் 13.07.2012 அன்று காலை 10.30 மணியளவில் துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.செல்வி ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சி துவங்கியது. கவிதாயினி நர்கீஸ் பானு அவர்களின் தலைமையில் சிறப்புக் கவியரங்கம் ‘தனிமை' மற்றும் ‘ஆசை' ஆகிய தலைப்புகளில் நடைபெற்றது. அதில் செல்வி ஆனிஷா, ஜெயராமன் ஆனந்தி, யமுனா லிங்கம், ஜியாவுதீன், அனுசுயா கந்தநாதன், சுப்பையா, மீனாகுமாரி பத்மநாதன், விருமை ஹுசேன், பேசில் ராஜா, காவிரிமைந்தன், சுப்பிரமணியன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்று தங்கள் கவிதைகளை வழங்கினார்கள்.
தமிழ்த்தேர் பதிப்பாசிரியர் திரு.ஜியாவுதீன் அவர்களின் வரவேற்புரையுடன் விழாவின் இதழ் வெளியீடுகள் தொடங்கின. மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் திரு.அப்துல் காதர் அவர்கள் மற்றும் ஜுராசிக் கிளினிக் சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை திரு. ஷர்புதீன் அவர்கள் தலைமை தாங்கினார். குத்தாலம் திரு. அஸ்ரப் மற்றும் திரு. எஸ்.எம்.பாஃரூக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நகைச்சுவையை அரங்கம்தோறும் வழங்கிவரும் சுரேஷ் கிருஷ்ணா தன் பங்கிற்கு அரங்கத்தை சிரி்ப்பொலியில் மூழ்கச் செய்தார். இயல்பான தன் பேச்சின் இடையிடையே கைதட்டல்கள் பெற்றார். தமிழுக்கு இதுபோல கவியரங்கம் தொடர்ந்து நடத்திவரும் அமைப்பினை வாழ்த்துவதுடன், இதுவே தான் கலந்து கொண்ட முதல் கவியரங்கம் என்றும் குறிப்பிட்டார். மதுரை தமிழ் ஆர்வலராய் பங்கேற்ற திரு.அப்துல் காதர் அவர்கள் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் மற்றும் திரு.அப்துல் சமது ஆகியோரின் தமிழ்ப்பற்றைப் பற்றியும், அவர்கள் ஆற்றிய பணிகளைப் பற்றியும் தமக்கே உரிய நேர்த்தியில் சிறப்புரையாற்றினார்.
பலகுரல் வித்தகர் தஞ்சை பேசில் ராஜா தனது பலகுரல் திறத்தோடு, நாட்டுப்புறப் பாடல் ஒன்றையும் பாடி அவையோரின் பாராட்டைப் பெற்றார்.
சிறப்பு விருந்தினர்கள் திரு.அப்துல் காதர் அவர்களுக்கு திரு. ஹனீபா நினைவுப் பரிசை வழங்கினார். திரு. சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நினைவுப் பரிசை திரு.சுப்பிரமணியன் வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு.தமீம் அன்சாரி அவர்களுக்கு நினைவுப் பரிசை திரு.ராஜகோபால் வழங்கினார்.
‘தனிமை' சிறப்பிதழின் முதல் பிரதியை திரு.அப்துல் காதர் வெளியிட திரு.சண்முகம் அர்த்தனாரி பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை திரு.சுரேஷ் கிருஷ்ணா வெளியிட திருமதி. அனுசுயா கந்தநாதன் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை திரு. தமீம் அன்சாரி வெளியிட திரு.ருங்மாங்கதன் பெற்றுக் கொண்டார்.
‘ஆசை' சிறப்பிதழின் முதல் பிரதியை திரு. எஸ்.எம். பஃரூக் வெளியிட திரு.விமல்ராஜ் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை திரு. ச. சுரேஷ் வெளியிட திரு.மோ.சுகுமார் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை திரு.ரா. சதீஷ்குமார் வெளியிட திரு. கணேஷ் பெற்றுக் கொண்டார்.
தமிழ்த்தேர் ஆசிரியர் கவிஞர் காவிரிமைந்தன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க, நிறைவுரையாக யமுனா லிங்கம் நன்றியுரையாற்றினார். காவிரிமைந்தன், ஜியாவுதீன், சிம்மபாரதி, கீழை ராஸா, சுப்பிரமணியன் மற்றும் யமுனா லிங்கம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.