எய்ட்ஸ் பரவாமல் தடுக்க புது மருந்து கண்டுபிடிப்பு: பரிசோதனை வெற்றி

எய்ட்ஸ் எனப்படும் உயிர்கொல்லி நோய் தாக்கியவர்களுக்கு மரணம்தான் இறுதியாக இருக்கிறது. எண்ணற்ற நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் சர்வதேச விஞ்ஞானிகளும், மருத்துவ உலகத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
எச்.ஐ.வி வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களிடம் இருந்து பிறருக்கு பரவாமல் தடுத்தாலே இந்த உலகத்தை எய்ட்ஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம். இதனை கருத்தில் கொண்டே அமெரிக்காவில் உள்ள உடா பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் எய்ட்ஸ் நோய் பரவாமல் கட்டுப்படுத்தும் புதிய மருந்தை கண்டு பிடித்துள்ளனர்.
குரங்குகளுக்கு செலுத்தி ஆய்வு
மனித குரங்குகளில் இருந்து உருவாகும் “எஸ்.ஐ.வி.” வைரஸ் கிருமிகள் சிறிய வகை குரங்குகள் மூலம் மனிதர்களுக்கு எய்ட்ஸ் கிருமிகளாக பரவுகின்றன. அவ்வாறு பரவும் வைரஸ் கிருமிகளை விஞ்ஞானிகளின் இந்த புதிய மருந்து அழிக்கும் தன்மை உடையது. “எஸ்.ஐ.வி.” (Simian immunodeficiency virus) கிருமிதாக்கிய 40 குரங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகளின் பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது. எனவே, இது எச்.ஐ.வி எனப்படும் வைரசை கொல்லும் என்றும் இதன் மூலம் எய்ட்ஸ் நோய் மேலும் உருவாகாமல் தடுக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து மனித சமுதாயத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
புதிய மைல்கல்
தற்போது “எச்.ஐ.வி.” கிருமிகளை அழிக்க கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த மருந்தின் மூலம் எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்தை விரைவில் தயாரிக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எச்.ஐ.வி பாதிப்பினால் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் மருந்தை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியது எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு சிறிதளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதன் புதிய மைல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.












Click it and Unblock the Notifications