துபாயில் 'நம்பிக்கையும் நடப்பும்' சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய்: துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை 'நம்பிக்கையும் நடப்பும்' என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவினை கடந்த 11ம் தேதி மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடத்தியது.துவக்கமாக திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். சிறப்புச் சொற்பொழிவாளர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது குறித்த அறிமுகவுரையினை முதுவை ஹிதாயத் வழங்கினார்.
'நம்பிக்கையும் நடப்பும்' எனும் தலைப்பில் பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது உரை நிகழ்த்தினார். நம்பிக்கையுடையவர்களுக்கு இறைவன் எத்தகைய உதவிகளை செய்கிறான் என்பதனை பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் மூலம் விவரித்தார். நம்பிக்கை தான் வாழ்க்கை என்னும் உயரிய தத்துவத்தை விளங்கிக் கொள்ள முடியும் என்பதை தனது உரையின் மூலம் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப், ஈடிஏ ஸ்கை சீ இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம். அப்துல் காதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா அரபிக் கல்லூரியின் முதல்வரும், நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாமுமான முஹம்மது இஸ்மாயீல் பாகவி ஹஜ்ரத் துஆ ஓதினார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஈமான் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.