கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வரதட்சணைக்கு எதிரான பேரணி

முதலில் இந்த பேரணிக்கு போலீசார் தடைவிதித்தனர். அதையும் மீறி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவர் அணியைச் சேர்ந்த 200 பேர் உள்பட இளைஞர்கள், இளம்பெண்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். வரதட்சணை வாங்க மாட்டோம், கொடுக்க மாட்டோம் என்று அவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த பேரணியால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று போலீசார் தெரிவித்தனர். வரதட்சணை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பேரணி என்று தெரிவித்தும் போலீசார் பேரணியில் கலந்து கொண்டவர்களை கைது செய்து அருகில் உள்ள திருமண மஹாலில் வைத்தனர். இரவு 9.30 மணிக்கு கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக பேரணியில் கலந்து கொண்டவர்கள் வரதட்சணை கொடுமைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திச் சென்றனர். இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் மௌலவி ரஹ்மத்துல்லா மற்றும் மாவட்ட செயலாளர்கள் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள், வரதட்சணை, பெண் சிசுக் கொலை போன்றவற்றை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறது என்று அதன் மாணவரணி செயலாளர் அஜ்மல் தெரிவித்தார். இனி வரும் காலத்தில் பெரிய அளவில் பேரணி நடத்தவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications