அவர்தானே கோச்சுக்கிட்டார், சமாதானமாயிடுங்களேன்...!

சண்டையே இல்லாத வீடு எங்கேயும் இருக்காது. கணவன் மனைவி இடையே சின்னச் சின்னச் உரசல்கள்.. வாக்குவாதங்கள் அவ்வப்போது ஏற்பட்டால்தான் இல்லறத்தில் சுவாரஸ்யம் கூடும். தம்பதியரிடையே சின்னச் சின்ன ஊடல்கள் ஏற்படுவது சகஜம்தான். அந்த ஊடல்கள்தான் அவர்களுக்கு இடையேயான பிணைப்பை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
தம்பதியர் அல்லது காதலர்கள் இடையே அவ்வப்போது சின்ன சின்ன ஊடல்கள் இருந்தால்தான் கூடல்கள் சுகமாக இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். சண்டைக்கான வாய்ப்பு ஏற்படும்போதே சமாதானத்திற்கான வழியையும் தேடவேண்டும். அப்பொழுதுதான் இல்லறம் நல்லறமாகும்.
மென்மையான கோபம்
குழந்தைகள் சண்டை போட்டுக்கொண்டால் சிறிதுநேரத்தில் சமாதானமாகிவிடுவர். அப்புறம் அந்த சண்டையின் சாயல் எதுவும் இன்றி சிரித்து விளையாடுவார்கள். அதுபோலத்தான் தம்பதியரிடையே பொய்யான கோபம், செல்லமான சண்டைகள் இருக்கவேண்டும்.
ஊடல் என்பது, உயிரோட்டமுள்ள ஒரு பொய்க்கோபம்தான் என்றாலும் தம்பதிகளும், காதலர்களும் ஊடல் என்பதை எதுவரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு வரையறை வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். தம்பதியரிடையேயான ஊடலானது ஒரு குழந்தையின் கோபம் போன்று மிகவும் மென்மையாக இருக்கவேண்டும் அதுதான் அழகு என்றும் கூறுகின்றனர்.
அன்பை புரிந்துகொள்ளுங்கள்
ஊடல் இல்லாத மண வாழ்க்கை ரசனை குறைந்தது. இயந்திரமயமானது. இதனை யாரும் ரசிக்க முடியாது. காதல் திருமணமானாலும், பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணமானாலும் அங்கே ஊடலுக்கு இடமுண்டு. ஊடல் என்பது ஒருவர் மனதை, பிடித்தமான இன்னொருவர் புரிந்து கொள்ள உதவி செய்யும் என்பது உண்மைதான். ஆனால் அந்த ஊடல் வெகுகாலம் நீண்டு விடக்கூடாது. ஊடல் இல்லாமல் மணவாழ்க்கை இல்லை என்பதால் இந்த ஊடல் முக்கியத்துவம் பெறுகிறது.
உடனடி தீர்வு வேண்டும்
ஆழ்மனதில் தோன்றும் அன்பு உரிமையாக மாறி, அந்த உரிமை தவிர்க்கப்படும்போது சிறு சிறு கோபங்களாக வெளிப்படும். இந்த கோபத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மனதில் சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடாது. தம்பதிகள் மனதில் ஏற்படும் ஊடலை இணக்கமான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வது நல்லது. ஊடல் பிரச்சினைக்குள் மூன்றாவது நபரை இடையில் வர அனுமதிக்கக்கூடாது. அனுமதித்தால் அது அவர்களுக்குள் இருக்கும் காதலை காலியாக்கிவிடும்.
காதலை சொல்லும் வழி
இன்றைய அவசரயுகத்தில் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளுக்கு கூட விவாகரத்து என்ற ஆயுதத்தை எடுக்கின்றனர். அதற்கு காரணம் அவர்களுக்குள் ஊடலும், கூடலும் இல்லாமல் இருப்பதுதான். விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையையும், விளக்கம் அளிக்கும் பொறுமையையும், அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் தன்மையையும் ஊடல் உருவாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
தென்றலாய் இருக்கவேண்டும்
குளிருக்கு கதகதப்பான நெருப்பைப் போன்றது ஊடல் என்று பெர்சியன் கவிஞர் கூறுகிறார். அந்த நெருப்பை வளரவிட்டு வேடிக்கை பார்க்கக்கூடாது. ஊடலும் அப்படித்தான். அதன் எல்லைக் கோட்டுக்குள் நிறுத்திவிட வேண்டும். இந்தப் பொறுப்பு தம்பதிகள் இருவருக்கும் இருக்கிறது. அதை வளரவிட்டு வன்மத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது. ஊடல் என்ற தென்றல் திசை மாறி சூறாவளியாகிவிடாமல் பார்த்துக்கொள்வது தம்பதிகளின் தலையாய பொறுப்பு.
ஈகோ வேண்டாமே
ஊடல் ஏற்பட்டு இருவரிடையே கோபம் இருந்தாலும் முதலில் யார் பேசுவது என்பதில் ஈகோ வேண்டாம். யாராவது ஒருவர் பேச்சை தொடங்குங்கள். இன்றைக்கு தகவலை வெளிப்படுத்த எத்தனையோ வழி உண்டு. எஸ்.எம்.எஸ்., இமெயில் என பல வழிகளில் ரொமான்ஸ் வார்த்தைகளால் உங்கள் துணையை அட்டாக் செய்யுங்கள். அப்படியும் மசியவில்லையா வேறு வழியில்லை சரண்டர் ஆகிவிடுவதுதான் ஊடலை தீர்க்கும் ஒரே வழி என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications