ஆடிக்கிருத்திகை… முருகன் ஆலயங்களில் பக்தர்கள் காவடி சுமந்து வழிபாடு
சென்னை: ஆடிக்கிருத்திகையை ஒட்டி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். காவடி சுமந்த தங்களின் நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள் முருகப் பெருமானை கண்குளிர தரிசனம் செய்தனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருத்தணி முருகன் கோவில். வள்ளியை முருகன் மணம் புரிந்த இடமாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
இங்கு ஆடிக்கிருத்திகை விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு உள்ளனர். மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

ஆடி பரணி அமர்க்களம்
நேற்றைய தினம் ஆடி பரணி விழாவை முன்னிட்டு முருகன், சிறப்பு அலங்காரத்தில் காட்சிக் கொடுத்தார். அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம், வைர கீரிடம் பச்சைகல் மரகத மாலை, அணிவிக்கப்பட்டிருந்தது.

காவடிப்பிரியன் முருகன்
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி என பல காவடிகளை சுமந்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று முருகனை வழிபட்டனர்.

அதிகாலை அபிஷேகம்
ஆடிக்கிருத்திகையை ஒட்டி அதிகாலையிலேயே முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்து முருகனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதை பார்க்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தெப்பத்திருவிழா
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு 3 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. சரவண பொய்கை எனும் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வள்ளி, தெய்வானை சமேதராய் உற்சவ கடவுள் எழுத்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.இதனால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

வடபழனியில் திருவிழா
சென்னை வடபழனியில் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது முருகப் பெருமானுக்கு வெள்ளி நாணய அலங்காரம் செய்யப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து தங்க அங்கி அலங்காரத்திலும், இரவு சந்தனக் காப்பு அலங்காரத்திலும் காட்சித் தருகிறார் முருகப் பெருமான். பக்தர்கள் கூட்டத்தை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் கந்தக் கோட்டத்திலும் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.












Click it and Unblock the Notifications