தேவதையே காதலியானால்... என்றென்றும் காதலர் தினம்தான்!
அதை விடுங்க.. இதையெல்லாம் விட ஒரு தேவதையே காதலியாக வாய்த்தால் எப்படி இருக்கும்... அதை விட வேறு என்னங்க தேவை.. அப்படிப்பட்ட காதலனுக்கு தினந்தோறும் காதலர் தினம்தானே...
சின்ன வயதில் பாட்டி மடியில் படுத்திருக்கும்போது அவர் கதை சொல்வார். ஒரு கை தலையைக் கோதி விடும், இன்னொரு கை முதுகைத் தட்டித் தரும். மார்போடு சேர்த்து அணைத்தபடி அந்த ஜாக்கெட் போடாத பாட்டி சொன்ன கதைகள் எல்லாமே பெரும்பாலும் தேவதைக் கதைகள்தான்.. அந்தக் கதைகளில் சொன்ன தேவதைப் பெண்ணை நிஜமாகவே பார்த்தபோதுதான் உண்மையிலேயே தேவதை என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.
பாட்டி சொல்வார்.. தேவதைகள் எப்போதும் நம்மோடுதான் இருப்பார்கள். உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் உடனே வந்து சரி செய்வார்கள். உனக்கு ஆறுதலாக இருப்பார்கள். உன் சந்தோஷத்திற்கு வழி வகுப்பார்கள்.உனக்குத் தேவையானதை செய்து தருவார்கள். அவர்கள் இருப்பது உன் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் உன் பக்கத்திலேயே அவர்கள் இருப்பார்கள். உன்னைக் கையில் தூக்கி தாங்கி நிற்பார்கள்...
நிஜம்தான். கண்ணில் தெரியாத தேவதை.. விண்ணுலகில் வியாபித்து நிற்கும் இப்படிப்பட்ட அருமையான தேவதைகள், மனசுக்குப் பிடித்த பெண்ணாக நம் கண் முன்பு வந்து நிற்கும்போது அதை விட வேறு என்ன தேவை...
நெஞ்சம் கணத்துப் போய் நின்றபோது
உன் கைகள் வந்து தாங்கியது
என்னை உன் கரங்களில் சேர்ப்பித்து விட்டேன்
இனி எதுவென்றாலும் அது உன் பொறுப்பு...
நாய் குட்டிப் போட்டதும் பார்த்திருக்கிறீர்களா... அப்படியே தாயுடன் சேர்த்து அப்பியபடியே படுத்திருக்கும் -சில நாட்களுக்கு. தாய் நாயும் அப்படியேதான், தனது மார்புகளை பிய்த்தெடுப்பது போல பால் குடிக்க முண்டியடிக்கும் குட்டிகளை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருக்கும். தனது நாவால் குட்டிகளை வருடித் தரும். அப்படிதாங்க காதலும்.. மனசு கஷ்டப்படும்போதும், வலியுடன் இருக்கும்போது என்னடாம்மா என்று நம்மைப் பார்த்து ஒரு வார்த்தை கேட்டால் அதை விட ஆறுதல் வார்த்தை ஏது உண்டு...
ஒவ்வொரு காதலனும் காதலியும் பரஸ்பரம் அன்பையும், வாஞ்சையயும்தான் எதிர்பார்க்கிறார்கள்.
என் இதயக் கூட்டில்
உன்னை ஒளித்து வைக்கிறேன்
குளிரும் உன்னைத் தாக்காது
வெயிலும் உன்னை காய்க்காது
இருவரது சுவாசமும் இனி ஒன்றே..
காதலனாக இருந்தாலும் சரி, காதலியாக இருந்தாலும் சரி காதலில் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்காது -பரிசுத்தமான அன்பும், என்றும் விலகாத பாசமும், எப்போதும் நேசிக்கும் காதலும் தான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் மார்போடு பொத்தி அணைத்துப் பாதுகாக்கும் தாயின் பாசத்துடன் கூடிய ஒரு தேவதைப் பெண் கிடைக்கும்போது எல்லாக் காதலர்களுக்கும், என்றென்றும் காதலர் தினம்தான் இல்லையா...
பரிசு வாங்கிக் கொடுத்தால்தான் காதலா... நேரில் பார்த்துக் கொண்டால்தான் காதலா.. நேசத்தை நெகிழ்ச்சியுடன் சொன்னால்தான் காதலா.. நிச்சயமாக இல்லை.. எண்ணத்தில் காதல் வழிந்தோடும்போது அப்படிப்பட்ட காதலர்களுக்கு தினந்தோறும் பிப்ரவரி 14தான்...