துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் 8வது ஆண்டு தொடக்க விழா
துபாய்: வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 8வது ஆண்டு தொடக்க விழாவும், எழுத்தாளர் இளம்பிறை ரஹ்மான் அவர்களது நூல்கள் வெளியீட்டு விழாவும் மற்றும் தமிழ்த்தேர் இலக்கிய மாத இதழின் கல்வி, புகழ் ஆகிய சிறப்பிதழ்கள் வெளியீட்டு விழாவும் 12.04.2013 அன்று 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.
செல்வி ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. வரவேற்புரை வழங்கியும் கவியரங்கத் தலைமையேற்றும் தனது சிம்மக்குரலால் நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார் அபுதாபி கவிஞர் குத்புதீன் ஐபக் அவர்கள். நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார் தமிழ்த்தேர் மாத இதழின் ஆசிரியர் கவிஞர் காவிரிமைந்தன்.

பெருங்கவிஞர் ஜின்னா ஷர்புதீன், ராம் விக்டர், குருநாதன், ஜாபர் அலி, அப்துல் ரவூப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் பெருவாரியாக கலந்துகொண்ட பெருமக்களில் எஸ்.எம்.பாரூக், ஆறுமுகம், கார்த்திக், ஸ்ரீதரன், சந்திரசேகரன், மெய்யப்பன் ஆகியோரும் அடங்குவர்.
வணக்கம் என்கிற தலைப்பில் அருமையான பாடல் ஒன்றை இயற்றி தானே இசையுடன் கூடி பாடி அவையோரை மகிழ்வித்தார் புதிய உறுப்பினர் திரு.பி.வி.கோவிந்தராசன் அவர்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களை நினைவூட்டும்விதம் அவரது பாணியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சாகித்ய அகடெமிக்கு இணையான பரிசைப் பெற்ற சிறுகதை எழுத்தாளர்களில் முன்னோடி இளம்பிறை ரஹ்மான் அவர்களைப் பற்றிய விரிவான அறிமுகத்தை காசி விஸ்வநாதன் அவர்கள் வழங்க, இலங்கையில் அவர் ஆற்றியிருக்கும் தமிழ் சேவையைப் பற்றி எடுத்துரைக்க தனியாக ஒரு மேடை வேண்டும் என்கிற அளவிற்கு உயரிய பணிகள் புரிந்து பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்ட பெருமகனை தமிழ்த்தேர் மற்றும் வானலை வளர்தமிழ் அமைப்பு சிறப்பு விருந்தினராக கெளரவித்து மகிழ்ந்தது.
அன்னாரின் படைப்புகளில் ‘இளமைப்பருவத்திலே' நூலினை பெருங்கவிக்கோ ஜின்னா ஷர்புதீன் வெளியிட வெங்கடகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். ‘சிறு கை நீட்டி' நூலினை எஸ்.எம்.பாரூக் வெளியிட ஜெயராமன் ஆனந்தி பெற்றுக் கொண்டார். ‘மரபுக் கதைகள்' நூலினை கதிரேசன் வெளியிட தஞ்சாவூரான் பெற்றுக் கொண்டார். ‘காந்தி போதனை' நுாலினை ஜாபர் அலி வெளியிட மதன் பெற்றுக்கொள்ள மற்றுமொரு நூலான இசுலாமிய ‘வரலாற்றுக் கதைகள்' நூலினைப் பாடகர் கோவிந்தராஜ் பெற்றுக் கொண்டார். குறிப்பாக இளம்பிறை ரஹ்மான் அவர்களது பெருமைகளை சுருக்கமாக அவையில் எடுத்துரைத்து தனது நன்றியறிதலை உணர்த்தினார் ஜின்னா ஷர்புதீன் அவர்கள்!
ரத்தினச்சுருக்கமாய் ‘ஒன்றுமில்லாத' என்கிற தலைப்பில் ஒரு வலம் வந்து திருக்குறள் விளக்கங்கள் சில தந்து நகைச்சுவைக் கவிதை வரை சபையை தன் கட்டுக்குள் வைத்திருந்தார் சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம் அவர்கள். மேடையில் என்ன பேசினால் இந்த சபை ஏற்கும் என்பதை நுண்ணியமாகக் கணக்கிடத் தெரிந்தவராய் வெற்றிபெற்றார் என்றால் அது மிகையில்லை!
கல்வி என்கிற தலைப்பில் சிறப்பிதழ் தமிழ்த்தேரின் 79வது படைப்பாக வெளியிடப்பட்டது. முதல் இதழை ஜின்னா ஷர்புதீன் வெளியிட திருமதி. ராஜம் சேது சுப்ரமணியம் அவர்களும் இரண்டாம் இதழை இளம்பிறை ரஹ்மான் வெளியிட திருமதி.கார்த்திக் அவர்களும் மூன்றாம் இதழை சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம் வெளியிட திரு.சந்திரசேகரன் அவர்களும் முறையே பெற்றுக் கொண்டார்கள்.
புகழ் என்னும் தலைப்பில் உருவான தமிழ்த்தேரின் 80வது படைப்பின் முதல் இதழை டோஸ்ட்மாஸ்டர் ஆறுமுகம் வெளியிட திருமதி.சுல்தானா பீ அவர்களும், இரண்டாம் இதழை ரிசிகேசன் வெளியிட திருமதி. ராஜாத்தி பாலசுப்பிரமணியன் அவர்களும், மூன்றாம் இதழை ஹெல்த் கணேசன் வெளியிட திருமதி. விஜி ஸ்ரீதரன் அவர்களும் முறையே பெற்றுக்கொண்டார்கள்.
பெருமக்கள் கெளரவிப்பு - பெருங்கவிக்கோ ஜின்னா ஷெர்புதீன் அவர்களுக்கு காவிரிமைந்தன் பொன்னாடை அணிவிக்க.. நினைவுப் பரிசை திருமதி. நர்கீஸ் ஜியா அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற ஹெல்த் கணேசன் அவர்களுக்கு நினைவுப் பரிசு கண்ணன் அவர்களால் வழங்கப்பட்டது சிறப்பு அழைப்பாளர் இளம்பிறை ரஹ்மான் அவர்களுக்கு பொன்னாடை ஜின்னா அவர்கள் அணிவிக்க நினைவுப்பரிசினை கார்த்திக் வழங்கினார். சிலேடை சித்தர் சே.சு. அவர்களுக்கு பொன்னாடையை யமுனாலிங்கம் அணிவிக்க நினைவுப் பரிசினை திரு.ஸ்ரீதரன் வழங்கினார்.
அமைப்பின் முகமாக விளங்கும் தமிழ்த்தேர் இதழ்களைச் செவ்வனே தொகுத்து புத்தக வடிவம்தந்து படைப்பாளர்களின் கரங்களில் தவழவிடும் திருமதி நர்கீஸ் மற்றும் பதிப்பாசிரியர் ஜியா அவர்களுக்கு நினைவுப்பரிசினை ராம்விக்டர் வழங்கி கெளரவித்தார். அதேபோல் தொடர்ந்து தமிழ்த்தாய்வாழ்த்து பாடிவரும் செல்வி ஆனிஷாவிற்கு நினைவுப்பரிசினை திருமதி. ரம்யா வழங்கினார்.
வானலை வளர்தமிழ் தொடங்குவதற்கு காரணமாய் அமைந்த ராம் விக்டருக்கு திருமதி ஸ்வேதா கோபால் நினைவுப்பரிசு வழங்கினார்.
நகைச்சுவையரங்கில் கலந்துகொண்ட செல்வன் தண்ணீர்மலை, செல்வி முத்துக்கோதை மற்றும் செல்வன் ஹுமைத் ஹபீபு ஆகியோர் நகைச்சுவைச் சரங்களை அள்ளியள்ளித் தந்தனர்.. அவையில் சிரிப்பொலி பரவிக்கிடந்தது.
கல்வி மற்றும் புகழ் ஆகிய தலைப்புகளில் கவிஞர் குத்புதீன் ஐபக் தலைமையில் அதிரை கலாம், ஜியாவுதீன், ஜெயராமன் ஆனந்தி, யமுனாலிங்கம், நர்கீஸ் பானு, இளையசாகுல், ஸ்வேதாகோபால், ஜெயாபழனி, சேது சுப்பிரமணியம் ஆகியோர் கவிதை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் நிறைவாக ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு தனக்கே உரித்தான பாணியில் தெள்ளிய நடையில் செந்தமிழில் நன்றியுரையாற்றினார் திருமதி.ஸ்வேதாகோபால் அவர்கள்.
அடுத்த மாதத் தலைப்புகளாக புரட்சி மற்றும் முழக்கம் என்று தமிழ்த்தேர் பதிப்பாசிரியர் ஜியாவுதீன் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவ ஸ்டார் கோவிந்தராஜ், ஹெல்த் கணேசன், காவிரிமைந்தன், ஜியாவுதீன், ஆதிபழனி, தஞ்சாவூரான், மற்றும் எம்.எம்.இப்ராஹிம் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications