துபாயில் இந்திய சுற்றுலாத்துறை குறித்த சிறப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாயில் இந்திய சுற்றுலாத்துறை குறித்த சிறப்பு நிகழ்ச்சி 07.05.2013 அன்று மாலை துபாய் மாலில் அமைந்துள்ள தி அட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்திய சுற்றுலாவின் மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்திய டைரக்டர் விகாஸ் ருஸ்டகி தலைமை வகித்தார். நிகழ்ச்சயில் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் கிரிஷ் சங்கர், ஜம்மு காஷ்மீர் மாநில சுற்றுலா அமைச்சர் குலாம் அஹமது மீர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கிரிஷ் சங்கர் தனது உரையில், வருடந்தோறும் வளைகுடாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அமீரக மக்கள் மிகவும் அதிக அளவில் வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.
அமைச்சர் குலாம் அஹமது மீர் தனது உரையில், ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு அனைவரும் வருகை தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இயற்கையுடன் கூடிய இப்பகுதிகள் இறைவனின் அருட்கொடை எனக் குறிப்பிட்டார்.
இந்திய பாரம்பர்யத்தை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிர்ஷ்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பல்வேறு மாநில சுற்றுலாத்துறை அதிகாரிகள், தேரா டிராவல்ஸ் மேலாண்மை இயக்குநர் கே.கே.எம். ஹனீஃப், பொது மேலாளர் டி.பி. சுதீஷ், மேலாளர் ஹாஜா மொஹைதீன், ஆரிஃபா குருப்பின் மேலாளர் ஹமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ...