துபாயில் அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய "இந்த நாள் இனிய நாள்"

இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியில் உறுப்பினர்கள், விருந்தினர்கள், குழந்தைகள் என்று சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். துபாய் மற்றும் ஷார்ஜா நகரங்களில் வசிப்பவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வசதியாக சிறப்புப் பேருந்துகளுக்கு விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். காலையில் உறுப்பினர்கள் பதிவு மற்றும் சிற்றுண்டியுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும், பல்வேறு வயது பிரிவுகளில் குழந்தைகளுக்காகவும் பல்வேறு சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
போட்டிகளில் வயது வித்தியாசமின்றி அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். மூன்று வயது குழந்தைகளுக்காகவும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மதிய உணவிற்குப் பின் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உடனடியான தலைப்புகளில் எவ்விதத் தயாரிப்புமின்றி ஒரு நிமிடம் பேசும் போட்டியில் ஆண்களுக்கிணையாகப் பெண்களும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
ஆங்கில சொற்களுக்கான தமிழ்க் கலைச்சொல்லைக் கண்டுபிடிக்கும் போட்டி புதிய கலைச்சொற்களை உறுப்பினர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. தனி நபர் திறமையை வெளிப்படுத்தும் போட்டிகளிலும் ஆண்களும் பெண்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளியான ஆகாஷ் என்ற சிறுவனும் உற்சாகத்துடன் கலந்து கொண்டது உறுப்பினர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அமைப்பின் தலைவர் காமராசன், செயலாளர் ஜெஸிலா ரியாஸ், கலைச் செயலாளர் ஃபாரூக் அலியார், பொருளாளர் நஜ்முதீன், இணைச் செயலாளர் இரமணி, ஆலோசகர்கள் அகமது முகைதீன், ஆசிப் மீரான் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரியாஸ் அகமது, அமீரா அமீன், பர்வீன் ஃபாத்திமா, மகேஷ் ஆனந்த், தௌலா, சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். பரிசளிப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் தேநீருடன் விழா இனிதே நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications