பார்வை ஒன்றே போதுமே...!

நிறையப் பேசிக் கொண்டிருந்தால்தான் காதலா... அல்லது ஏதாவது சில்மிஷமாக சீண்டிக் கொண்டிருந்தால்தான் காதலா... நிச்சயம் கிடையாது.. மனங்களின் புரிதல்தான் உண்மையான காதல். நீண்ட காலம் பார்க்காமல் இருந்தாலோ அல்லது ரொம்ப நாட்களாக பேசாமல் இருந்தாலோ கூட காதல் மட்டும் அப்படியே மறையாமல், உயிர்ப்போடுதான் இருக்கும்... அப்படித்தான் இருக்க வேண்டும், அதுதான் உண்மையான காதல்...!
உன் இரு கண்களும்
என்னை ஊடுறுவி நெஞ்சுக்குள் போய்
என்னென்னவோ செய்கிறதடி
இருந்தாலும்
இந்த பார்வை ஒன்றே போதும்
பல பிறவிகளைப் பார்த்து விட...
காதலியின் கண்களைப் பார்த்தே இப்படி கிறங்கிப் போகும் காதலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தேவதையடி நீ எனக்கு
தேறுதலடி நான் உனக்கு
வான் மழையடி நீ எனக்கு
வண்ண மயில் நான் உனக்கு
கோகுலமடி நீ எனக்கு
கண்ணனடி நான் உனக்கு
பல்லவியடி நீ எனக்கு
பாசுரமடி நான் உனக்கு... லயித்துப் போய் ரசித்தால் மட்டுமே இப்படியெல்லாம் பாடத் தோன்றும்.
காதலியின் நினைவு வரும்போதெல்லாம் எங்கிருந்துதான் அந்த சந்தோஷம், உற்சாகம், மிதப்பு வருமோ தெரியவில்லை. எதை எதையெல்லாமோ சர்வே எடுப்பவர்கள் இதையும் சர்வே செய்தால் நன்றாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் முதலில் பெருக்கெடுத்து வெளியேறுவது கவிதைகள்தான்...
சிலருக்கு காதலியின் சிரிப்பொலி கேட்டுக் கொண்டிருந்தாலே போதும், சுகமாக இருக்கும்.
உன் சிரிப்பு என்னை பலவீனமாக்கி விட்டது
நான் பலம் பெற
மீண்டும் ஒருமுறை சிரியேன்...!
சிரித்துப் பலவீனமானவன் எப்படி சிரிப்பால் பலம் பெற முடியும் என்று கேட்கலாம்... நிச்சயம் முடியும், காரணம், காதல்!.
உன் இமை இடையில்
என் இதயம்
இளகிய பின்
ஒரு உதயம்
உயிர் அணுவின்
உள் உருவம்
உதைபடுமே உன் நினைவில்
மழை தரும் உன் மெல் சிரிப்பு
என்னுள்ளே நித்சலனமாய்
நின்று விட்ட உன் நினைவுகள்
என்றும்
என் கூட வரும்..!
ஒவ்வொரு நொடியும் ஒரு புது அனுபவம் தருவது காதல் மட்டுமே... நேரில் பார்த்தால்தான், பேசினால்தான் என்றில்லை...நினைவுகள் தரும் சுகம் அதை விட இரட்டிப்பானவை, இனிமையானவை... சின்னதாக ஒரு தென்றல் போல அவ்வப்போது வந்து போனால் கூட போதும், உயிர்ப்புடன் உங்களை அது வைத்திருக்கும்... காதலை விட அருமையான ஆக்சிஜன் உலகில் வேறு எதுவுமே கிடையாது. ரசியுங்கள் காதலை,. பிப்ரவரி 14 மட்டுமல்ல, எப்போதும், என்றென்றும்!.












Click it and Unblock the Notifications