ராதா கிருஷ்ணர் திருக்கல்யாணம்… பக்தர்கள் உற்சாகம்
மானாமதுரை: திருப்புவனத்தில் ராதாகிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது. ஏரளாமான பக்தர்கள் உற்சவத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்புவனத்தில் ஸ்ரீசத்குரு நாம ஸங்கீர்த்தன பஜன் மண்டலி சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ரதா கிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை திருமஞ்சனம், திருவாதாரனத்துடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணர் வீதியுலா நடைபெற்றது. நேற்று காலை உஞ்சவிருத்தியுடன் விழா தொடங்கியது. சிறப்பு அலங்கார கோலத்தில் உள்ள கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருக்கல்யாண சீர்வரிசைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பக்தர்களுக்கு கிருஷ்ணர்&ராதை சம்பவங்களை எடுத்து கூறும் வண்ணம் சிறுவர் சிறுமியர்களுக்கு வேடம் அணிந்து நடித்து காண்பித்தனர். கோலாட்டம், வெண்ணை திருடுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தின.
நண்பகல் ஒரு மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தில் ஆதிநாராயணசாஸ்திரிகள் கிருஷ்ணராகவும் ராஜப்பா ராதையாகவும் மாறி மாலை மாற்றி கொண்டனர், பின் திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் பாண்டுரங்கா, கோவிந்தா என கோசம் எழுப்பி பக்தி பரவசத்தில் மூழ்கினர்.

திருக்கல்யாண உற்சவத்தில் ஞானாநந்தர் சுவாமிகள், தியாகராஜ சுவாமிகள், ஸ்யாமா சாஸ்திரிகள், முத்துஸ்வாமி தீட்சிதர் பாடிய பஜனை பாடல்களை மதுரை கண்ணன் பாகவதர் குழுவினர் பாடினர்.
ராதா கிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசத்குரு நாம ஸங்கீர்த்தன பஜன மண்டலி தலைவர் ராஜப்பா தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.













Click it and Unblock the Notifications