#Fathersday... ஒரு தந்தையின் உணர்ச்சிக் குரல்!
சென்னை: நம்மை உறைய வைத்த தந்தையர் தின வாசகர மடல் இது. மகளைப் பிரிந்த தந்தையின் உணர்ச்சிக் குரலாக இது பதிவாகியுள்ளது.
இந்த வாசகர் தனது பெயரைப் போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அவரது பெயரை மட்டும் எடுத்து விட்டு அவரது உணர்வுகளை இங்கு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்...
வணக்கம். தந்தையர் தின பதிவுகள் யாவும் என் தந்தையை நினைவூட்டுகின்றன.
ஆனாலும் தந்தையர் தினம் அவரவர் தந்தையை மட்டும் நினைவுகூர்வதற்கு அல்லவே.. ஒவ்வொரு தகப்பனும் அவன் பிள்ளைகளுக்கு என்ன செய்தோம் என்று அவரவர் தியாகத்தை பெருமையோடு கொண்டாட வேண்டிய தினம் என்பது எனது எண்ணம். ஆனால், ஒரு அப்பனாய் என் மகளுக்கு எதையுமே செய்ய அனுமதிக்கப்படாத கையறு நிலையில் நான் படும் துயரம் எந்த தகப்பனுக்கும் வரக்கூடாது.
அவளின் நன்மைக்காக அவளது அம்மாவை சுயமரியாதையோடு பிரிந்த அவள் அப்பன் நினைவுகளில் அவள்தான் என்பதை உணர்வாள் காலம் உருண்டோடியபின். என்றாவது ஒருநாள் என் கண் நோக்கி அவளின் வாய் உச்சரிக்கும் "அப்பா" என்று. அதுவரை நான் நடை பிணமாய்..
இந்த கவிதையை நான் அவளின் பிரிவால் சென்ற வருடம் இதே நாள் எழுதினேன்.. பிரசுரித்தால் நன்றி. (தயவு செய்து என் பெயர் வேண்டாமே..)
பிரிவின் பாஷை - Happy Father's Day
ஆத்தா!
ஒன் மொகம்
பாத்து அம்பாளே
வெட்குது
கையசைச்சா
முத்தம் குடுக்க
அணிப்புள்ள
ஓடி வருது
நீ சிரிக்க
குயிலெல்லாம்
நின்னு கேட்குது
சீனி காலடிய
தொட்டு பாக்க
எறும்பெல்லாம்
ஏங்கி நிக்கிது
ஒன் சட்டையில
பட்டாய் பாத்தபின்ன
பட்டுப்பூச்சி
மோட்சம் கேட்குது
நீ குளிக்க
சிறுவாணி
தவங்கெடக்குது
தல முடியோட
பேச காத்து
காத்தா பறக்குது
கண்ண
பாத்த விடிவெள்ளி
ஒளிஞ்சு தவிக்குது
கன்னகுழியில
ஆட்டம் போட
மேகமெல்லாம்
தெரண்டு நிக்கிது
கண்மை நெறத்த
பாத்து காக்காகூட்டம்
வாய பொளக்குது
வச்ச பூவு
ஜாதியில
ஒசந்து நிக்கிது
தலையாட்டி பொம்மை
ஜிமிக்கி பாத்து
சுளுக்கி ஓடுது
ஒன் வாயில
மொளைக்க
சிப்பியெல்லாம்
முத்த கக்குது
நீ சிணுங்க
கோயில் மணி
பயந்து பொகும்
அழுதா கடல்கூட
கரைஞ்சு போவும்
ஒன் மொகம் பாக்க
பேச கேட்க
என் மனசு
மண்டி போடுது
இந்த அப்பன்
வேண்டி நீ பேசும்
பாஷ புரியா
வெட்டி ஊரு
கொட்டி சிரிக்குது