தேவி நாச்சியப்பனுக்கு பால சாகித்ய புரஸ்கார், சபரிநாதனுக்கு யுவ பிரஸ்கார் விருதுகள் அறிவிப்பு
சென்னை: குழந்தைகள் இலக்கிய துறைக்கு அளித்த பங்களிப்பிற்காக, எழுத்தாளர் தேவி நாச்சியப்பனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாதெமியின் 2019-ஆம் ஆண்டு பால, யுவ புரஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.. யுவ புரஸ்கார் விருதுக்கு கவிஞர் சபரிநாதன் எழுதிய வால் கவிதைத் தொகுப்பும், குழந்தைகள் இலக்கிய பங்களிப்புக்கு தேவி நாச்சியப்பனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சாகித்திய அகாடமி விருது என்பது, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, மத்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.
இதற்கான பரிசுத்தொகையாக ரூ.1 லட்சம் மற்றும் ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இதுபோல் இளம் படைப்பாளிகளுக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான இளம் படைப்பாளி, யுவபுரஸ்கார் விருது, 'வால்' என்ற கவிதை தொகுப்புக்காக எழுத்தாளர் சபரிநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு 29 வயதுதான் ஆகிறது என்பது கவனிக்கத்தக்கது. கவிதையையும் விமர்சனத்தையும் மொழிபெயர்ப்புகளையும் செய்துவருபவர் சபரிநாதன்.
'களம் காலம் ஆட்டம்', 'வால்' ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளும் இவருக்கு எழுத்துலகத்தில் புகழ் சேர்த்தவையாகும். இதேபோல, ஸ்கான்டிநேவியக் கவிஞர் தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் எழுதிய கவிதைகளை உறைபனிக்குக் கீழே என்ற தலைப்பில் இவர் மொழிபெயர்த்துள்ளார்.
குழந்தைகள் இலக்கிய துறையில் அரிய பங்களிப்பு வழங்கியதற்காக, தேவி நாச்சியப்பனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications