மகா சிவராத்திரி: விடிய விடிய சிவனுக்கு அபிஷேகம்- பக்தர்கள் தரிசனம்
சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிவனுக்கு விடிய, விடிய அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மாசி மாத தேய்பிறையில் சதுர்த்தியன்று மகா சிவராத்திரி வருகிறது. திரியோதசி முன் இரவு வரை இருக்க, நடு இரவில் சதுர்த்தி வந்தால் அது மிக விசேஷம். அது உத்தம சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.
சூரிய உதயம் முதல் மறுநாள் வரை சதுர்த்தசி இருப்பது மத்ய சிவராத்திரி. முதல் நாளிரவில் நிசி நேரத்தில் சதுர்த்தசி நேராமல் மறுநாள் இரவு நிசி நேரத்தில் சதுர்த்தசியும் அமாவாசையும் சந்திப்பது அதம சிவராத்திரி. சோமவாரத்தில் வரும் சிவராத்திரி விரதத்திற்கு மூன்று கோடி சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
உத்தம சிவராத்திரி
இந்தாண்டு மகாசிவராத்திரியன்று இரவு 7.30 மணிக்கு மேல் சதுர்த்தி துவங்கி மறுநாள் மாலை வரை சதுர்த்தசி இருப்பதால் உத்தம சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் சிறப்பு
சிவபெருமான் அடி முடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த தினமே மகா சிவராத்திரி திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி உருவானதாகக் கூறப்படும் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் இவ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
லட்சார்ச்சனை
இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மூலவர் சன்னிதியில் ஏராளமான மலர்களைக் கொண்டு லட்சார்ச்சனை நடைபெற்றது.
ஆலயங்களில் அலங்காரம்
ராஜகோபுரத்தில் இருந்து கோயில் மூன்றாம் பிரகாரம் வரையில் உப்பு, மலர்கள், பல்வேறு வண்ணங்களைக் கொண்டு சிவனின் உருவங்கள், சிவனின் லீலைகள் வரையப்பட்டிருந்தன. இதை, ஏராளமான பக்தர்கள் பார்த்து வணங்கினர்.
லட்ச தீப வழிபாடு
மாலை 6 மணிக்கு கோயில் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளிட்ட கோவில் வளாகம் முழுவதும் லட்ச தீபங்களை ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். திரும்பி திசையெல்லாம் ஏற்றப்பட்டிருந்த லட்ச தீபங்கள் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கோயில் முழுவதும் லட்ச தீபங்களால் ஜொலித்தது.
நான்கு கால பூஜைகள்
மகா சிவராத்திரியையொட்டி, வியாழக்கிழமை இரவு 8.30, இரவு 11, அதிகாலை 3, அதிகாலை 4 ஆகிய நேரங்களில் முறையே முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் கால சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
தாழம்பூ அபிஷேகம்
நள்ளிரவு 12 மணிக்கு கோவில் கருவறையின் மேற்குத் திசையில் உள்ள ஸ்ரீலிங்கோத்பவ மூர்த்திக்கு தாழம்பூவைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மயிலாப்பூரில் 7 சிவ ஆலயங்கள்
மகாசிவராத்திரியை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள சிவன், முருகன், அம்மன் கோவில்களில் வியாழக்கிழமை இரவு 4 கால பூஜை நடைபெற்றது. சென்னை மட்டுமல்லாது சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பக்தர்கள் விரதம் இருந்து வந்து வழிபாடு நடத்தினர்.
பஞ்சபூத ஸ்தலங்கள் தரிசனம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மல்லீஸ்வரர்,விருபாட்சீஸ்வரர் கோவில், காரணீஸ்வரர், வாலீஸ்வரர் கோவில் வெள்ளீஸ்வரர் தீர்த்த பாலீஸ்வரர் கோவில் என 7 சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மல்லீஸ்வரர் கோவிலில் சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களை குறிக்கும் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
கபாலீஸ்வரர் கோவிலில்
மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை ஒட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைவனை தரிசனம் செய்தனர்.
பனிலிங்க தரிசனம்
காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை ஒட்டி பனிலிங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கலை நிகழ்ச்சிகள்
மகா சிவராத்திரியை ஒட்டி விடிய விடிய கண்விழிக்க வேண்டும் என்பதால் சிவ ஆலயங்களில் தேவாரப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி, பல்வேறு நாட்டிய குழுக்களின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள், மற்றும் பக்திப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றன.