சிங்கப்பூரில் நடந்த இந்திய முஸ்லிம் பேரவையின் இஃப்தார் நிகழ்ச்சி
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 16 இந்திய முஸ்லிம் சங்கங்களின் கூட்டமைப்பான இந்திய முஸ்லிம் பேரவை (Federation of Indian Muslims - FIM) மற்றும் மஸ்ஜித் பென்கூலன் இணைந்து நடத்திய இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி 20.07.14 அன்று மாலை 6 மணியளவில் பென்கூலன் பள்ளி 3வது தளத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக மாண்புமிகு. மசகோஸ் ஜூல்கிஃப்லி (Masagos Zulkifli) அவர்கள் (மூத்த துணை அமைச்சர், உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சு) கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சியில் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் விஜய தாக்கூர் சிங் உட்பட 15 நாடுகளின் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், இந்திய முஸ்லிம் சங்கங்களின் நிர்வாகிகள், சிண்டா, ஜாமியா போன்ற சமய மற்றும் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டார்கள்.
பென்கூலன் பள்ளியின் உஸ்தாத் கையூம் பாகவி அவர்களின் குரான் வசன ஓதுதலை தொடர்ந்து எப்ஐஎம் மற்றும் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க (UIMA) தலைவரான ஹாஜி. ஃபரியுல்லாஹ் அவர்களின் தலைமையுறை நடந்தது. மினி என்வைரான்மெண்ட் சர்விஸ் (MES) குழும நிர்வாக இயக்குனர் ஹாஜி. எஸ்.எம். அப்துல் ஜலீல் அவர்கள் சிறப்பு விருந்தினரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். ஹாஜி. ஃபரியுல்லாஹ் அவர்கள் பாராட்டு சான்றிதழை வழங்கினார்கள்.
அதை தொடர்ந்து சிறப்பு விருந்தினரின் உரை நிகழ்ந்தது. பென்கூலன் பள்ளியின் வரலாறு குறித்து பள்ளியின் துணை தலைவர் ஹாஜி. ரஃபிக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியை தோப்புத்துறை முஸ்லிம் சங்கம்-சிங்கப்பூரின் தலைவரும், எப்ஐஎம் துணை தலைவருமான ஹாஜி. டாக்டர் தே.எம். தீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
சரியாக 7:18 மணியளவில் உஸ்தாத் கையூம் பாகவி அவர்களின் துவாவை தொடர்ந்து அனைவரும் நோன்பு திறந்தனர். ஹாஜி. டாக்டர் கே.எம். தீன் அவர்களின் நன்றியுறையுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.