உம்முல் குவைனில் பிறைமேடை மாதம் இருமுறை அறிமுக நிகழ்ச்சி
துபாய்: துபாயில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள உம்முல் குவைன் அமீரகத்தில் பிறைமேடை வாசகர் வட்டத்தின் சார்பில் 13.12.2013 அன்று காலை பிறைமேடை இதழ் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
அமீரக காயிதே மில்லத் பேரவையின் உம்முல் குவைன் அமீரக செயலாளர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் வரவேற்புரை நிகழ்த்தினார். பிறைமேடை இதழ் அமீரகம் முழுவதும் பரவலாக்குவதற்குரிய ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் பீ.மு. மன்சூர் பிறைமேடையை அறிமுகம் செய்து வெளியிட்டார். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்று இன்று நாடாளுமன்றத்தில் வேலூர் தொகுதியின் பிரதிநிதியாக மக்கள் சேவையாற்றி வரும் எம். அப்துல் ரஹ்மான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சமுதாய விழிப்புணர்வு செய்திகளைத் தாங்கி பிறைமேடை இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. அமீரகமெங்கும் பிறைமேடை இதழை பரவலாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களின் பணி சிறக்க வாழ்த்தினார்.
நிகழ்வில் திண்டுக்கல் ச.ம.உ. ஜமால் முஹைதீன், சீர்காழி சகோதரர்கள் அம்ஜத் கான், அஹமது ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.