அமீரகத்தில் நடந்து வரும் மனிதநேய மக்கள் கட்சி நிகழ்ச்சிகள்: தமிழர்கள் வரவேற்பு
துபாய்: மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரியும், மாநில அமைப்புச் செயலாளர் ராசுதீனும் ஐக்கிய அரபு நாடுகளில் கட்சி ரீதியான சுற்றுப்பயணத்தில் உள்ளனர்.
கடந்த 7ம் தேதி அன்று அபுதாபியில் மர்ஹபா வெல்பேர் அசோசியேஷன் சார்பில் பல்வேறு தமிழக அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கடந்த 9ம் தேதி மமக பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்க கூட்டமும் எழுச்சியாக அமைந்தது. பல்வேறு ஜமாத்களின் பிரதிநிதிகளும், பல்வேறு கட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் படித்த இளைஞர்களும், பல்வேறு முக்கிய துறைகளில் செல்வாக்குடன் பணியாற்றும் நண்பர்களும், தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி நுழைவாயிலுக்கு மறைந்த இடதுசாரி தலைவர் ஏ.பி. பரதன் அவர்களின் பெயரும், அரங்கத்திற்கு சமூக சேவகர் செங்கிஸ்கான் பெயரும் சூட்டப்பட்டு நிகழ்ச்சி பன்முகத்தன்மையோடு நடைபெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியில் கட்சி நிலைபாடு, அரசியல், சமூகம் குறித்து மக்கள் கேட்ட கேள்விகளுக்கு தமிமுன் அன்சாரி தெளிவாக விளக்கமளித்தார்.

நிகழ்ச்சிக்கு அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் தலைமையேற்றார். துபாய், ஷார்ஜா, அல் அய்ன், அபுதாபி மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 1 வாரத்தில் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்திக்காட்டிய துபாய் மண்டல செயலாளர் யூசுப்ஷா உள்ளிட்ட அனைவருக்கும் பொதுச் செயலாளர் பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியை சமூக இணையதளங்களில் பார்த்து சகோதர சமுதாயங்களை சேர்ந்த பலரும் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ள நிவாரணத்தில் உதவி செய்த அனைத்து தமிழர்களுக்கும் பொதுச் செயலாளர் நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications