திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி
திருப்பாவை - 28
கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினா லுன்றன்னை
சிறுபே ரழைத்தனவும் சீறி அருளாதே!
இறைவா! நீதாராய்! பறையேலோ ரெம்பாவாய்!
விளக்கம்:
அருள் மிகுந்த இறைவனே இடையர் குலத்தில் பிறந்த நாங்கள் பசுக்களை மேய்த்து அவற்றின் பின் செல்வோம். காட்டில் மேய்ந்த பின்னர் எங்களுக்குள் எந்த மாறுபாடும் இல்லாமல் எல்லோரும் சேர்ந்து உண்போம். கொஞ்சம் கூட கள்ளமில்லாத இப்படிப்பட்ட ஆயர்குலத்தில் நீ வந்து பிறந்தாய். நீயே எங்களுக்குத் தலைவனாக வந்து சேர்நததை எண்ணி நாங்கள் புண்ணியமடைந்தோம். உனக்கும், எங்களுக்குமான உறவு பிரிக்க முடியாதது. உனது பெயரைச் சொல்லி அழைக்கிறோமேஎன்று சீறி எழாதே. நாங்கள் அறியாத சிறு பிள்ளைகள். அதற்காகக் கோபம் கொள்ளாமல், இறைவா உன் அருளை எங்களுக்குத் தந்தருள்வாயாக.
திருப்பள்ளியெழுச்சி - 8
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
விளக்கம்:
என்னை ஆட் கொண்ட இனிமையான அமுதம் போன்ற சிவபெருமானே! அழகிய மெல்லிய விரல்களையுடைய பார்வதி தேவியுடன் அடியவர்களின் உள்ளங்களில் நிறைந்து அருள்பவனே! அனைத்துக்கும் முதலும், நடுவும், முடிவுமாய் நிற்பவன் நீயே! பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். திருப்பெருந்துறை கோவிலையும் காட்டினாய். அந்தணன் வேடத்தில் வந்து என்னையும் ஆட்கொண்டாய். அமுதம் போன்ற என் சிவபெருமானே, படுக்கையிலிருந்து துயில் நீங்கி எழுந்து வந்து எனக்கருள்வாய் இறைவாய்.