மார்கழி பூஜை - திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்
திருப்பாவை பாடல் 18
உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,
நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்;
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம் :
மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற!
இதோபார், கேள். சேவல்கள் எல்லாத் திசைகளிலும் கூவுகின்றன. அந்த அழைப்பைக் கேளாயோ? குயிலிணங்கள் கூவுகின்றன. அதுவும் கேட்கவில்லையா? பொழுது விடிந்து விட்டது.
பந்தை அணைத்தபடி படுத்திருப்பவளே! உன் கணவனான கண்ணனை போற்றிப் பாட வந்திருக்கிறோம். வளையல்கள் சப்தமிட, தாமரை மலர் போன்ற உன் கைகளால் கதவைத் திற. வா.
திருவெம்பாவை - 18
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
பொருள்: பெண்ணே! அண்ணாமலையானின் தாமரை போன்ற திருவடிகளை, தேவர்கள் சென்று வணங்கும்போது , அவர்களுடைய திருமுடி மகுடங்களில் இருக்கும் பல வகையான இரத்தினங்களின் ஒளி குறைந்து தோன்றும். அது போல, காலையில் கதிரவனின் ஒளி எழும்பி இருளை நீக்கும்போது குளிர்ந்த ஒளியுடன் திகழ்ந்த விண்மீன்கள் ஒளி குறைந்து காணாமல் போகின்றன.
பெண்ணாகி, ஆணாகி, இரண்டு தன்மையும் இல்லாமல் ஆகி, மிகுந்த ஒளியுடைய வானமும், நிலமும் ஆகி, வேறு தன்மையாகவும் ஆகி, கண்களால் பருகி நிற்கும் அமுதமும் ஆகி நின்றான். திருவடிகளைப் பாடியவாறு, இந்த மலர்கள் நிறைந்த புனலில் குதித்து நீராடுவோம்.