ஜித்தாவில் அனைத்து சமூகத்தினர் பங்கேற்ற தஃபாரெஜ்-ஜித்தாவின் இஃப்தார் நிகழ்ச்சி
ஜித்தா: ஜித்தா நகரில் தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் 'இஃப்தார்' நிகழ்ச்சி கடந்த 28ம் தேதி நடைபெற்றது.
சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் 'இஃப்தார்' என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி ஜூன் 28ம் தேதி அன்று ஹோட்டல் இம்பாலாவில் நடந்தது.
தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் ஒன்பதாவது ஆண்டாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக ஜித்தாவில் இயங்கும் அனைத்து தமிழ் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளும், தமிழ் அமைப்புகளின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி, பேரீச்சம்பழம், சமோசா, பக்கோடா, பழ வகைகள், பழச்சாறு, மற்றும் மினரல் வாட்டர் வழங்கப்பட்டது. மாணவர்கள் ஹசீப் மற்றும் அர்ஷத் கிராஅத்துக்குப்பின், ஷாஹுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதனை தொடர்ந்து அப்துல் பத்தாஹ் பிரபல பேச்சாளர் "ஷேக் வஜ்டி அக்காரி"-ஐ அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ஷேக் வஜ்டி அக்காரி பேசும்போது, "இஸ்லாத்தின் நெறிமுறைப்படி வாழ்ந்தால் எந்தப் பிரச்சனையானாலும் எப்படி எளிதாக வெற்றி பெறலாம்" என்று ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மேஜர் ராமசாமி, அன்புமணி, கமாலுதீன், அருண்குமார், ஜாகிர் ஹுசைன் ஆகியோர் ரமலான் மாதத்தின் சிறப்புகளையும், நோன்பின் அவசியத்தைப் பற்றியும் பேசியதோடு, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தஃபாரெஜ்-ஜித்தாவின் சமூக சேவையை பாராட்டினர். மீரான் மூஸா தஃபாரெஜ்-ஜித்தா பற்றியும், அது செய்து வரும் சமூக சேவைகளை பற்றியும் பட்டியலிட்டார்.
நிகழ்ச்சியின் முடிவில் வந்திருந்த அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டார்களால் அறுசுவை (இரவு) விருந்து பரிமாறப்பட்டது.
ஜமீல் தாவூத், நைனா முஹம்மது, இப்ராஹீம் மரைக்காயர் மற்றும் தஃபாரெஜ்-ஜித்தா தலைவர் முஹையதீன் சீனி அலி உள்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பீர் முஹம்மது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, ஷாஜஹான் நன்றியுரை கூறினார்.