தமிழுக்கு இன்னுமோர் சிறப்பு... ஹூஸ்டன் கல்வி மாவட்டத்தில் இரண்டாம் மொழியாக தமிழ்!
ஹூஸ்டன் (யு.எஸ்): ஹூஸ்டன் கல்வி மாவட்டத்தில் இரண்டாம் மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது
அமெரிக்கப் பள்ளிகளில் இரண்டாம் மொழியாக உருவெடுத்து வருவதன் மூலம், தமிழ் மொழி அமெரிக்காவில் அழுத்தமாக காலடி எடுத்து வைத்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள்
தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொண்டர்கள் உதவியுடன், அமெரிக்கா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. வார இறுதியில் சுமார் 2 மணி நேரம் நடைபெறும் வகுப்புகள் மூலம், எட்டாம் நிலை வரை தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது.
அமெரிக்கத் தமிழ் கல்விக் கழகம் மற்றும் கலிஃபோர்னியா தமிழ் கல்விக் கழகம் (தற்போது உலகத் தமிழ்க் கல்விக் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) ஆகிய இரு அமைப்புகளின் பாடத்திட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இரண்டாம் மொழி தமிழ்
அடுத்த கட்டமாக உள்ளூர் கல்வி மாவட்டத்தில், இரண்டாம் மொழிக்கான மதிப்பெண் பெறும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கலிஃபோர்னியா உள்ளிட்ட சில நகரங்களில் அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், ஹூஸ்டன் கல்வி மாவட்டத்திலும் இரண்டாம் மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டுவிழாவில் இந்த தகவலை பள்ளித் தலைவர் கரு. மாணிக்கவாசகம் தெரிவித்தார்.
ஆறு கிளைகளுடன் தமிழ்ப் பள்ளி
ஆறு கிளைகளுடன் ஹூஸ்டன் பெரு நகரத் தமிழ்ப் பள்ளி ஹூஸ்டன் மாநகரப் பகுதிகளில் பியர்லேண்ட், கேட்டி, உட்லண்ட்ஸ், வெஸ்ட் ஹூஸ்டன், சுகர்லேண்ட் மற்றுக் கேட்டி துணைப்பள்ளி என ஆறு கிளைகளில் தமிழ்ப் பள்ளி செயல்பட்டு வருகின்றன.
பள்ளியின் ஆண்டுவிழாவில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் தமிழ்த் திறனை வெளிப்படுத்தினர்.
பள்ளித் தலைவர் கரு. மாணிக்கவாசகம் வரவேற்புரை ஆற்றினார். அமெரிக்காவிலே உலகத் தரம் வாய்ந்த மதிப்பீட்டுக்குழு (AdvanceED) மூலம் அங்கீகாரம் (Accreditation) பெற்ற முதல் தமிழ்பள்ளி என்பதையும் நினைவு கூர்ந்தார்.
இந்தியத் தூதரக அதிகாரி
இந்தியத்தூதரக அதிகாரி இரவிந்திர ஜோஷி கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டினார்.
அமெரிக்கத் தமிழ்க் கல்வி இயக்குனர் பொற்செழியன் இராமசாமி சிறப்புரை ஆற்றினார். ஹூஸ்டன் தமிழர்களின் தொடர் முயற்சிகளைப் பாராட்டிய அவர், அங்கு தமிழிசையும் தொடர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்
உயர் நிலைப் பள்ளியில் தமிழுக்கு மதிப்பெண்
பள்ளிச் செயலாளார் ஜெகன் ஆண்டறிக்கை வாசித்தார். ஹூஸ்டன் கல்வி மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளி பயிலும் மாணவர்கள், எவ்வாறு தமிழ் மொழிக்கான மதிப்பெண் பெறுவது என்பதையும் விவரித்தார்.
சுகர்லேண்ட், வெஸ்ட் ஹூஸ்டன் கல்வி மாவட்ட பள்ளிகளில் இரண்டாம் மொழி அங்கீகாரம் பெற எடுத்து வரும் முயற்சிகளையும் குறிப்பிட்டார்.
சென்னை - கடலூர் வெள்ள நிவாரணத்திற்காக மாணவர்கள் திரட்டிக் கொடுத்த 10 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி பற்றியும் ஜெகன் தனது உரையில் தெரிவித்தார்.
விருதுகளும் கலை நிகழ்ச்சிகளும்
மாணவர்களின் தமிழ்த் திறனை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
திருக்குறள் ஒப்புவித்ததில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு கரு.மாணிக்கவாசகம் பரிசளித்தார்.
தமிழ்த்திறன் போட்டி, வகுப்புத் தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணாவர்களுக்கு வகுப்பு ஆசிரியர்கள் விருதுகள் வழங்கினார்கள்.
ஐந்து மணி நேரம் நடைபெற்ற விழாவில் 500க்கும் மேற்பட்ட பெற்றோர்களும், இந்தியாவிலிருந்து வந்திருந்த தாத்தா-பாட்டிகளும் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் சுஜாதா, ஆனந்த், ரத்னா, அனிதா நன்றியுரை வழங்கினார்கள். அறுசுவை உணவுடன் விழா நிறைவு பெற்றது.
-இர தினகர்