வழக்கொழிந்து போகும் முன்னர் வட்டார மொழிகளை மீட்க ஒரு “வீடியோ” முயற்சி
சென்னை: தமிழ்நாட்டின் வட்டார மொழிகளை மீட்டெடுக்கும் வகையில் தமிழர் பண்பாட்டு மையம் என்ற அமைப்பானது காணொளித் தொகுப்பு ஒன்றை வெளியிட உள்ளது.
இதுகுறித்து தமிழர் பண்பாட்டு மைய அமைப்பின் செயலாளர் இராச்குமார் பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், "இன்றைய காலகட்டத்தில், உலகமெங்கும் தமிழர்கள் வாழ்ந்தாலும் , தமிழர்களிடையே தமிழ் பயன்பாடு குறைந்து வருகிறது.
இதை உணர்த்தும் விதமாக "தமிழர் பண்பாட்டு நடுவம்" ஒரு காணொளித் தொகுப்பொன்றை வெளியிடவுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி, பிற நாடுகளில் வாழும் தமிழர்களும் தங்கள் ஆதரவை எங்களுக்கு தர வேண்டுகிறோம்.
நீங்கள் செய்யவேண்டியது நாங்கள் தரும் ஒரு வசனத்தை உங்கள் வட்டார பேச்சு வழக்கில் பேசி அதை ஒரு காணொளிக் காட்சி அதாவது வீடியோ வடிவில் எங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
அதை தொகுத்து ஒரு முழுக் காணொளியாக நாங்கள் வெளியிடவுள்ளோம். உதாரணத்திற்கு, கோயம்புத்தூரில் ஒருவர் பேசும் ஒரு வசனத்தை சென்னை வாசி வேறு விதமாக பேசுவார்.
இவ்வாறு நாம் கொடுக்கும் வசனத்தை,உங்கள் பெயர், நீங்கள் வாழும் மாவட்டம் அல்லது நாடு என்பதையும் குறிப்பிட்டு உங்கள் முகம் தெளிவாக தெரியுமாறு முடிந்தவரை ஒலித் தெளிவோடு அனுப்பி வையுங்கள்.
உங்களுக்கான வசனம்:
" உலகத்தில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், தமிழர்களிடையே தமிழில் தான் பேச வேண்டும்". இதற்கான கால அவகாசம் 05.12.2014 தேதி வரையில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் காணொளியை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் - [email protected]
மேலும் விபரங்களுக்கு 0091 9551882647 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications