தமிழ் உணவுக்கும் அமுதென்று பேர்… சிங்கப்பூரில் அசத்திய தமிழ்மொழி விழா
தமிழ் மொழி விழா சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழர் பாரம்பரிய உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து விரிவாக பேசப்பட்டது.
சிங்கப்பூர்: தமிழ் மொழி விழா சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய உணவை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.
கடந்த 15ம் தேதி சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ் மொழியுடன், தமிழர்களின் பாரம்பரிய உணவு, அதனை மீட்டெடுக்க வேண்டிய அவசியம், ஆரோக்கியம் குறித்து விரிவாக பேசப்பட்டது.
பாரம்பரிய உணவு
உலகம் ஒரு கிராமமாக சுருங்கி படுவேகமாக மனிதர்கள் செயல்பட்டு வரும் நிலையில், பலருக்கு நிதானம் தவறி பாரம்பரிய வாழ்க்கையில் இருந்து விலகி ஓடிவிடுகிறார்கள். இதில் தமிழர்களும் விதிவிலக்கல்ல. தமிழர்கள் பாரம்பரிய உணவை மறந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில், தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
உணவே மருந்து
மேலும், பாரம்பரிய உணவுகளே மனிதர்களின் மருந்தாக எப்படி இருந்தது என்பது பற்றியும் இங்கு விரிவாகப் பேசப்பட்டது. மறக்கப்பட்ட உணவுகள் மீட்டெடுக்கப்பட்டால் நோய்கள் வராமல் தடுக்க உதவும் என்றும் விழாவில் அறிவுறுத்தப்பட்டது.
நன்மைகள்
மேலும், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளின் உள்ள நன்மைகள் என்னென்ன என்பது பற்றியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் எடுத்துரைத்தார்கள்.
சிறுதானியம்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் இருந்து சித்த மருத்துவர் சிவராமன் அழைக்கப்பட்டார். அவர் கொள்ளு, எள், மஞ்சள், சிறுதானியங்கள் உள்ளிட்ட உணவை பற்றி சிறப்பாகப் பேசினார்.