காவிரிக்கு வழியை விடு.. ஸ்டெர்லைட்டை மூடு.. ஆஸ்திரேலியாவில் எதிரொலித்த தமிழர் முழக்கம்- வீடியோ
Recommended Video
சிட்னி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கட்சிகள் சார்பிலும், தன்னெழுச்சியாகவும் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன.
மே 3ம் தேதிக்குள், காவிரி தீர்ப்பை செயல்படுத்த ஒரு திட்ட வரைவுடன் வருமாறு உச்சநீதிமன்றம், இன்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டம்
அதே போல், மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும், தூத்துக்குடி, ஸ்டெர்லைட் தாமிர ஆலை விரிவாக்க பணிகளை நிறுத்த தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுக்க வாழும் தமிழர்களும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளித்து தங்களது ஆதரவை பதிவு செய்யது வருகிறார்கள்.
விக்டோரியா நாடாளுமன்றம் எதிரே
இங்கிலாந்து, துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த விவகாரங்களுக்காக தமிழர்கள் ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் விக்டோரியா நாடாளுமன்ற வளாகம் முன்பு தர்ணா நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கையாக இருந்தது.
முழக்கம்
இந்தப் போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர். "தடை செய், தடை செய், ஸ்டெர்லைட்டை தடை செய், கொண்டு வா, கொண்டு வா, காவிரியை கொண்டுவா, அமைத்திடு, அமைத்திடு, காவிரி ஆணையம் அமைத்திடு, தாமிர லாபம் உனக்கு, புற்றுநோய் எனக்கா, வழியைவிடு, வழியைவிடு காவிரிக்கு வழிவிடு, வாழவிடு, வாழவிடு, தமிழர்களை வாழவிடு" போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பதாகைகள்
போராட்டத்தில் பங்கேற்ற, ஆண்களும், குழந்தைகளும், பெண்களும், கோரிக்கையை வலியுறுத்திய பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர். தமிழர்களின் இந்த தர்ணா போராட்டத்தை அவ்வழியாக சென்ற ஆஸ்திரேலியர்களும் பார்த்து, இதுகுறித்து விளக்கம் கேட்டதை வீடியோக்களில் பார்க்க முடிகிறது. மொத்ததில், கிழக்கேயுள்ள ஆஸ்திரேலியா முதல் மேற்கேயுள்ள அமெரிக்காவரை தமிழர்களுக்கான குரல் தமிழர்களால் எழுப்பப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இந்த ஒலி மத்திய அரசு காதுகளில் விழுமா?