அடங்காத கண்ணீர்- தமிழரசன்
சென்ற திசையெல்லாம்
கொத்தெலும்பையும்,
கோவனத்தையும் தவிர வேறென்ன
நான் பார்த்தேன்;
கலப்பையையும்,
கஞ்சிக்கலயத்தையும்
தூக்கிக்கொண்டு,
தேடிக்கொண்டிருக்கிறான் - அங்கே
வாழ்க்கையை;
கைக்குட்டையும்,
கண்மையுடனும் - வந்து
கருத்துக்கூறிக்கொண்டிருக்கிறது
ஒரு கூட்டம்
மனித உரிமையைப்பற்றி!
அவமானங்கள் ஆயிரமாயிரம்,
அசிங்கத்தின் சின்னங்கள் அங்கே
சிம்மாசனத்தில்,
அவதானித்து செல்கிறேன் - நான்
அஹிம்சைவாதி!
வாயடைத்துதான் நிற்கவேண்டும்,
வாய்ப்பு கிடைக்கும் வரை;
வயதாகிக்கொண்டிருக்கிறது என்
கனவுகளுக்கு,
கற்சிலை அமைக்க துடிக்கிறேன்,
கல்லறை வடிவில் அல்ல!
காரியம் நிச்சயம் கைகூடும் - நான்
சாமியாரைக் கேட்கவில்லை!
ஆயிரம் சாமியார்கள் உண்டு - நாட்டில்
அமைதி எங்கும் இல்லை!
ஆயிரம் கோயில்கள் உண்டு - நாட்டில்
சாமிக்குப் பஞ்சமில்லை;
எரிகிறது,
வயிறு மட்டுமல்ல,
ஊரும்தான் - விளக்கைத்தவிர!
எமன் இருப்பது மட்டுமே உண்மை;
எருமையில்தான் வருவானா?!
எதிர்பார்க்க வேண்டாம்;
அழகென்று நினைத்த
அலையிலும் வருவான்;
மனிதனை மனிதனே கொல்கிறானாம்?!
தாங்காமல் தவித்தவன் தவம்
கலைந்து விட்டது;
ஆடிவிட்டான் அவன்
கோர தாண்டவம்;
அடங்கிப்போயிருக்கும்
அவன் பசி;
அடங்கவில்லை - என்
கண்களில் கண்ணீர்!