For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புரிந்தால் சொல்லுங்களேன்...!

By Staff
Google Oneindia Tamil News

என்னை மீறிய, எல்லை மீறிய
ப்ரபஞ்சம் பற்றிய ப்ரக்ஞை
எனக்குள் எங்கோ ஊற்று கண்ணாய்...

எத்தனை முறைதான் தோற்க
"நான்" அறியும் முயற்சியில் என்னிடமே
மீண்டும்...மீண்டும்

பிறப்பிற்கு முன்
"நான்" எங்கிருந்தது?
இறப்பிற்கு பின்
"நான்" என்னவாகப்போகிறது?

இடைப்பட்ட காலங்களில்
"நான்" - ஐ உருவாக்கியவர்கள்
"நான்" - ல் உருவானவர்கள்
"நான்" - உடன் பிறந்தவர்கள்
"நான்" - உடன் கலந்து பழகுகிறவர்கள்
இவர்களுக்கெல்லாம் என்ன சம்மந்தம்?

சாங்கிய யோகம், சனாதன தர்மம்
த்வைத, அத்வைத மற்றும் புருஷ, ப்ரக்ருதி
எதுவும் புரியவில்லை....அல்லது
புரிவதற்கு அதில் எதுவுமில்லை.

இறந்து கிடக்கயிலும் சரி
பிறந்து கிடக்கயிலும் சரி
என்ன வித்தியாசம் பெரிதாய்....
எனக்கும் எருமைக்கும்?

படைத்தவனின்றி படைக்கப்பட்ட பொருளில்லை
இறைவன் இருப்புக்கு இவர்கள் சொன்ன வியாக்யானம்.
எங்கிருக்கிறான் (மனிதனை தவிர்த்த) அந்த இறைவனை படைத்தவன்?
எவர்க்கும் தெரியவில்லை.

இரண்டாய் படைத்தானாம் எல்லாவற்றையும் இறைவன்
இரவு - பகல்
இன்பம் - துன்பம்
வெப்பம் - குளிர்ச்சி
உற்று நோக்குகையில் உண்மை ஒன்று உருப்பெருகிறது
ஒன்றின் இன்மையே இன்னொன்றின் இருப்பாய் உணரப்படுகிறது - எனில்
எதுதான் உண்மையில் உண்மையாய் இருக்கிறது?

இம்மாதிரியான கேள்விகள் தவிர்த்த
இறப்பிற்கான காத்திருத்தலையும் தவிர்த்த
உருப்படியான செயல் ஏதெனும் இருப்பின்
சொல்லியனுப்புங்களேன் எனக்கும் சேர்த்து

காலம் சொட்டிக்கொண்டே இருக்க
கவலை விஷமாய் பற்றி ஏரிக்கொண்டே இருக்க
கடக்க வேண்டிய தூரம் பற்றிய ப்ரக்ஞையும் இன்றி
பயனற்ற பாரங்களை சுமந்தவாறு....

இவ்வாறாய் கழியும் இவர்களின் வாழ்க்கை பற்றி
புரிந்தால் சொல்லுங்களேன்...!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X